எரிபொருள் நெருக்கடியை சமாளிப்பதற்கு முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில உரிய திட்டங்களை முன்னெடுக்கவில்லை.
அதேபோன்று, வரலாற்றில் எந்த கைத்தொழில் அமைச்சருக்கும் வழங்காத நிதியை விமல் வீரவங்சவிற்கு வழங்கிய போதிலும் கைத்தொழில்துறையை மேம்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காது எதிர்க்கட்சியின் நோக்கத்தை நிறைவேற்றி, எதிர்காலத்தில் பதவிகளுக்கு வருவதற்காக நாட்டை காட்டிக்கொடுக்கும் செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுத்ததாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இரத்தினபுரியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
அரசாங்கத்தில் இருந்துகொண்டு எதிர்க்கட்சியின் பணிகளை முன்னெடுத்த வலுசக்தி அமைச்சரே எங்கள் அரசில் இருந்தார்.
அமைச்சிலிருந்து வெளியேறும்போது, 04 நாட்களுக்கே எரிபொருள் இருக்கின்றது.
இன்று எரிபொருள் தீர்ந்துவிட்டது, ஆப்பில், திராட்சை கொண்டுவருகின்றனர்.
ஆனால், டொலர் வழங்குவதில்லை என்றெல்லாம் கூறினர்.
இவ்வாறு ஆச்சரியப்படவைக்கும் அமைச்சர்களே எங்களுடன் இருக்கின்றனர்.
நான்கு நாட்களுக்கே எரிபொருள் இருப்பதாக அமைச்சர் ஒருவர் கூறினால் மக்கள் அச்சமடையமாட்டர்களா, சில அமைச்சர்கள் கூட அச்சமடைந்து தங்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொண்டதாகக் கூறுகின்றனர்.
மேலும், 500 ரூபாவுக்கு எரிபொருளை பெற்றுக்கொண்டவர்கள், இன்று முழு தாங்கிக்கும் நிரப்பிக்கொண்டால் ஏனைய மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, அமைச்சரின் அறிவிப்புகளால் பொதுமக்களே அதிகம் பாதிக்கப்பட்டனர்.
எனினும், எரிபொருள் தட்டுப்பாட்டை தடுப்பதற்கு எவ்வித திட்டங்களையும் முன்னெடுத்திருக்கவில்லை.
இதனால், சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டன.
ஆனால், அரசாங்கத்தில் இருப்பதாகக் காட்டிக்கொண்டு அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுவதற்காக அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்தனர்.
அதேபோன்று, இலங்கை வரலாற்றில் எந்தவொரு கைத்தொழில் அமைச்சருக்கும் வழங்காத நிதியை தற்போதிருந்த அமைச்சருக்கு வழங்கியுள்ளனர். கைத்தொழிலை மேம்படுத்துவதற்காக 05 பில்லியன் ரூபா வழங்கப்பட்டது. ஆனால், எதனையும் செய்யாது, எதிர்க்கட்சியின் நோக்கத்தை நிறைவேற்றி, எதிர்காலத்தில் பதவிகளுக்கு வருவதற்காக நாட்டை காட்டிக்கொடுக்கும் செயற்பாடுகளையே பதவி நீக்கப்பட்ட அமைச்சர்கள் முன்னெடுத்தனர்.
அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களும் இவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டமைக்கும் அமையவே, அவர்கள் இருவரையும் ஜனாதிபதி அமைச்சு பதவிகளிலிருந்து நீக்கினார் என்றார்.