வீரர்களைத் தேர்வு செய்யும் போது பாரபட்சம் பார்க்கப்படுகிறதா?

0
77

 2024 ஆம் ஆண்டு ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணிக்கான வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் போது, ​​பாரபட்சம் பார்ப்பதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்த இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுத் தலைவர் உபுல் தரங்க, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையில் எந்த அணிக்கும் சவால் விடுமளவு இலங்கை அணி நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

உலகக் கோப்பைக்கான இலங்கை டி20 அணி தொடர்பான பல்வேறு விசனங்களை நிவர்த்தி செய்ய நடைபெற்ற ஊடக சந்திப்பில், வீரர்களின் திறமை, உடற்தகுதி மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றைத் தவிர தேர்வில் எந்த பாரபட்சமும் இல்லை என்று தரங்க கூறினார். உலகக் கோப்பைக்காக பெயரிடப்பட்டுள்ள 15 பேர் கொண்ட அணி சமநிலை மற்றும் சக்தி வாய்ந்தது என்றார். 

அணித்தலைவர் வனிந்து ஹசரங்க மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன பற்றிய காயம் குறித்த கவலைகளுக்கு பதிலளித்த தரங்கா, இரண்டு வீரர்களும் போட்டிக்கு தகுதியானவர்கள் என்று கூறினார்.

துனித் வெல்லலகே அணியில் சேர்க்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, ​​தரங்க அவரது ஓல்ரவுண்ட் செயல்திறன் மற்றும் அமெரிக்காவில் உள்ள நிலைமைகளில் அணிக்கு சாத்தியமான நன்மை இருப்பதாக எடுத்துரைத்தார். 

“துனித் ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளர், அவரை முதல் 6 ஓவர்களில் கூட பயன்படுத்த முடியும்,” என்று கூறினார்.

பானுக்க ராஜபக்சவைத் தேர்ந்தெடுப்பது குறித்து தெரிவிக்கையில், அனைத்து தேர்வாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் தலைவருடன் விரிவான கலந்துரையாடலுக்குப் பிறகு எடுக்கப்பட்ட முடிவே இது என்று விளக்கினார்.

“தனஞ்சய ஒரு நல்ல ஓல்-ரவுண்டர், எனவே அவரை பானுகாவுக்கு பதிலாக சேர்க்க நாங்கள் தேர்வு செய்தோம்,” என்று அவர் தெளிவுபடுத்தினார்.

அணியில் மூன்று முக்கிய ஓல்ரவுண்டர்களான தனஞ்சய, அஞ்சலோ மத்யூஸ் மற்றும் தசுன் ஷானக்க ஆகியோரைப் பயன்படுத்துவது குறித்து கேட்டபோது, ​​தனஞ்சய டி சில்வாவை விட மத்யூஸ் மற்றும் ஷானக்கவுக்கு விளையாடும் 11 பேருக்கான முன்னுரிமை வழங்கப்படும் என்று தரங்க கூறினார்.

குசல் ஜனித் பெரேரா அணியில் இல்லாதது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த தலைமை தேர்வாளர், அவரது திறமை இருந்தபோதிலும் சமீபத்திய ஆட்டத்தை மேற்கோள் காட்டி வருத்தம் தெரிவித்தார். 

குசல் மற்றும் பானுகா அணியில் சேர்க்கப்படாத போதிலும், குசல் மெண்டிஸ், பதும் நிஸ்ஸங்க, சரித் அசலங்கா மற்றும் தசுன் ஷனக போன்ற வீரர்களுடன் அணியின் வலுவான பேட்டிங் வரிசையை தரங்கா வலியுறுத்தினார்.

மதீஷ பத்திரனவின் காயம் குறித்து தரங்கா கூறுகையில், பத்திரன முழுப் போட்டியிலும் பங்கேற்கலாம் என மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன என தெரிவித்தார்.

விஜயகாந்த் வியாஸ்காந்தைச் சேர்ப்பது பற்றிப் பேசுகையில், மேற்கிந்தியத் தீவுகளில் விளையாடும் சூழ்நிலையில் அவர் பயனுள்ள தேர்வாக இருப்பார் என்று தேர்வாளர்கள் நம்பினர் என அவர் கூறினார். 

சுழற்பந்து வீச்சாளர்களான அகிலா தனஞ்சய மற்றும் ஜாஃப்ரி வான்டர்சே ஆகியோருடன் ஒப்பிடும்போது வியாஸ்காந்தின் வலுவான ஆட்டமே அவரை ட்ராவிலிங் ரிசர்வ் ஆக சேர்க்க ஒரு காரணம் என்று தேர்வாளர் அஜந்த மெண்டிஸ் கூறினார்.

அணிக்கு வீரர்களைத் தேர்ந்தெடுக்கும்போது தேர்வாளர்கள் ஒழுக்கத்தை கவனிக்கவில்லையா என்று கேட்டபோது, ​​தரங்க அவற்றை மறுத்து, ஒழுக்கம் ஒரு முக்கியமான காரணி என்றார். 

“வீரர்கள் எங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால் அவர்களின் ஒழுக்கத்தை நாங்கள் கருதுகிறோம், மேலும் எந்தவொரு தவறான நடத்தையும் அணியை மட்டுமல்ல, நமது நாட்டின் நற்பெயரையும் பாதிக்கும்” என்று தரங்க உறுதிப்படுத்தினார்.

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2024க்காக இலங்கை அணி நாளை அமெரிக்கா செல்கிறது.