இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு சொந்தமான மும்பை ஹோட்டலில் வேஷ்டி, சட்டையில் சென்ற மதுரை பிரபலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் விவாதத்தை கிளப்பி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் ரன் மெஷின் விராட் கோலி. உலககோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் தற்போது நடந்து வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வில் உள்ளார். அடுத்ததாக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் தொடரில் அவர் அணியில் இடம்பிடித்துள்ளார்.
விராட் கோலி கிரிக்கெட் மட்டுமல்லாமல் ஹோட்டல் பிசினஸை நடத்தி வருகிறார். புதுடெல்லி, புனே, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் விராட் கோலி ‛One8 Commune’ என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.
சமீபத்தில் அதன் இன்னொரு கிளை மும்பையில் திறக்கப்பட்டது. மும்பையில் திறக்கப்பட்ட விராட் கோலியின் ஹோட்டலுக்கு நிறைய பேர் சென்று வருகின்றனர். ஹோட்டல்
இந்நிலையில் தான் தமிழ்நாட்டின் மதுரையை சேர்ந்தவர் ராம். தமிழ் ராப் பாடல்கள் பாடி இன்ஸ்டாகிராமில் ராவண ராம் என்ற பெயரில் பிரபலமானார்.
எப்போதும் வேஷ்டி சட்டை அணிந்து ராப் பாடல், அடுக்குமொழி பேசி தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வரும் இவரை ஏராளமானவர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தான் ராவண ராம் மும்பை சென்ற நிலையில் வேஷ்டி சட்டை அணிந்து விராட் கோலியின் ஹோட்டலுக்கு உணவு சாப்பிட சென்றார்.
அப்போது அவரை ஹோட்டல் ஊழியர்கள் உள்ளே அனுமதிக்கவில்லையாம். அதாவது வேஷ்டி சட்டையில் ஹோட்டலுக்குள் செல்ல அனுமதியில்லை என ஊழியர்கள் கூறி அவரை வெளியே அனுப்பி உள்ளனர். இதனால் மனவருத்தம் அடைந்த ராவண ராம் அந்த ஹோட்டல் முன்பு நின்றபடி தனக்கு நேர்ந்த சம்பவத்தை பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர், ,‛‛இதுதான் விராட் கோலி சாரின் ஒன்8 ஹோட்டல். இப்படி நடந்தது மனதுக்கு கஷ்டமாகி விட்டது. விராட் கோலியின் பெயருக்காக இங்கு வருகின்றனர். இதை சொல்லியே ஆகனும். நான் புதிய வேஷ்டி அணிந்து தான் ஹோட்டலுக்கு வந்தேன். ஆனால் டிரஸ்கோட் சரியில்லை என ஊழியர்கள் என்னை அனுமதிக்கவில்லை. இதன் மீது நடவடிக்கை எடுப்பார்களா? என தெரியவில்லை என பதிவிட்டுள்ளார்.
ஆனால் இதுபோல் மீண்டும் நடக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும். லுங்கி ஷார்ட்ஸ் அணிந்து வரும்போது அனுமதிக்கவில்லை என்றால் பரவாயில்லை.நான் தமிழ் கலாசார உடையுடன் வந்துள்ளேன். அதோடு அதிக பசியோடு வந்தேன் .ஆனால் அவர்கள் என்னை அனுமதிக்கவில்லை. இது மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. வருத்தத்தோடு அறைக்கு செல்கிறேன்” என்றார்.
இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் தற்போது கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். வேஷ்டி சட்டை என்பது தமிழ் கலாசார உடையாகும். இந்த உடையணிந்தவருக்கு ஹோட்டலில் அனுமதி மறுக்கப்பட்டது ஏற்றுக்கொள்ளவே முடியாது என சாடி வருகின்றனர். அதோடு இதுபோன்ற ஆடை சார்ந்த நடவடிக்கையை விராட் கோலியின் ஹோட்டல் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.