போலியான தகவல்களை வழங்கி, அஸ்வெசும நலன்களை பெற்றவர்களிடம் இருந்து, பணத்தை மீளப் பெறவும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருவதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று, ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார்.
அஸ்வெசும முதல் கட்ட கணக்கெடுப்பில், 34 இலட்சம் குடும்ப அலகுகளின் தகவல்கள் சரிபார்க்கப்பட்டன.
அதன்படி, 19 இலட்சம் குடும்பங்கள் பயன் பெற தகுதி பெற்றுள்ளன.
இதுவரை பெறப்பட்ட மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளின் அடிப்படையில், ஜூலை 2024 முதல், தகுதியானவர்களுக்குப் பணம் செலுத்த, நலன்புரி நன்மைகள் சபை தயாராக உள்ளது.
எங்களுக்கு, 12 இலட்சத்து 27 ஆயிரம் முறைப்பாடுகள் மற்றும் ஆட்சேபனைகள் கிடைத்துள்ளன.
அதில் உள்ள, சுமார் 11 இலட்சத்து 97 ஆயிரம் பேர் தொடர்பில், இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தொகைக்கு மேலதிகமாக, அஸ்வெசும உதவிகள், உண்மையிலேயே தகுதியான ஒரு குழுவினருக்கு கிடைக்கவில்லை.
முதல் கட்ட விண்ணப்பத்தில், அவர்களுக்கு விண்ணப்பப் படிவங்களை வழங்காததால், அவர்களுக்கு அஸ்வெசும பலன் கிடைக்கவில்லை.
ஒன்லைன் ஊடாக மேற்கொண்ட பரந்த விழிப்புணர்வுக்குப் பிறகு, 2 இலட்சம் முதல் 2 இலட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளோம்.
இவ்வாறாக பிரதேச செயலகங்களுக்கு நேரடியாக வழங்கப்படும் விண்ணப்பப் படிவங்கள், தற்போது எமது மென்பொருளில் உள்வாங்கப்படுகின்றது.
அதன்படி, இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரல், எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதியுடன் நிறைவடையும்.
விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிக்காத எவரும், அஸ்வெசும பலன்களைப் பெற தகுதி பெற மாட்டார்கள் என்பதை வலியுறுத்த வேண்டும்.
புதிய விண்ணப்பதாரர்களின் தரவு சரிபார்ப்பு மற்றும் சான்றுப்படுத்தல் என்பன நிறைவடைந்த பிறகு, 2024 ஜூன் முதல், 24 இலட்சம் குடும்ப அலகுகளுக்கு, அஸ்வெசும பலன்கள் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான அஸ்வெசும தொகைக்காக, 205 பில்லியன் ரூபாவை செலவிட எதிர்பார்க்கிறோம்.
அதனுடைய ஒதுக்கீடுகள் தற்போது முடிவடைந்துள்ளது.
இதுவரை கிடைத்த மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை அடுத்து, சுமார் 7 ஆயிரம் பேர், அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தவறான தகவல்களை அளித்து, நன்மைகளை அடைந்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறான நபர்கள் பற்றிய தகவல்களை பெற்றுக் கொண்டுள்ளோம்.
அவர்களிடம் இருந்து பணத்தை மீளப் பெறவும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருகிறோம். என குறிப்பிட்டுள்ளார்.