இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைப் பயன்படுத்துதல் மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியின் எதிர்காலப் போக்குகள் குறித்து ஆராய விரிவான திட்டம் ஒன்றின் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
நேற்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற ‘வலுசக்தி மாற்றத்தின் எதிர்காலப் பாதை’ எனும் தலைப்பில் இடம்பெற்ற வட்டமேசை கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
‘வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்காக செயற்படும் இலங்கை தற்போது புதிய பொருளாதார கட்டமைப்பில் கவனம் செலுத்தியுள்ளது. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பசுமைப் பொருளாதாரமாக மாறுவதே எமது நோக்கமாக உள்ளதுடன், அதிக போட்டித்தன்மை கொண்ட ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக அது இருக்க வேண்டும்.
நாம் ஏற்கனவே, அந்த நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ளதுடன், பொருளாதாரத்தின் சில புதிய துறைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்போது, இலங்கையில் கிடைக்கும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையில் இலங்கை முன்னணியில் வருவதற்கான அதிக சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது.
மேலும், இலங்கையின் உலர் வலயப் பிரதேசத்தில் காற்றாலை வலுசக்தி உற்பத்திக்கான சாத்தியக்கூறுகளுடன், அத்துறையில் விரைவான அபிவிருத்தியை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இது பூஜ்ஜிய உமிழ்வு நிலையை அடைவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பிற்கு இணங்குவதுடன், 2040 ஆம் ஆண்டளவில் இந்த இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சிற்கு ஏற்கக்கூடிய பல திருத்தங்களுடன் இரண்டு நாட்களுக்கு முன்பு உயர் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட மின்சார சீர்திருத்த சட்ட மூலத்தை நாம் ஏற்கனவே முன்வைத்துள்ளோம். எதிர்வரும் மாதத்தில் இந்த சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், பொருளாதார மாற்ற சட்டமூலம் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது இப்போது உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது, மேலும் இது நிச்சயமாக இந்த ஜூலை தொடக்கத்தில் சட்டமாக மாறும். எனவே, இந்த நடவடிக்கைகள் தற்போது அரசியலமைப்பு சபையில் நடைபெற்று வருகின்றன.
மேலும், காலநிலை மாற்ற சட்டம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வருகிறது, இது தொடர்பான மூன்றாவது சட்டமாகும். நான்காவதாக, வலுசக்தி மாற்றத்திற்கான சட்டத்தை நாம் கலந்துரையாட வேண்டும். சில நாடுகளில் வலுசக்தி மாற்றம் தொடர்பான சட்டங்கள் உள்ளன.நாங்கள் அதை ஆய்வு செய்து வருகிறோம், மேலும் தெற்கு அவுஸ்திரேலியா போன்ற சில பகுதிகளில் அந்தச் சட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதையும் ஆய்வு செய்துள்ளோம். வலுசக்தி மாற்றத்திற்கான சட்டத்தை உருவாக்குவதற்கு இது நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.
சுற்றாடல் அமைச்சும் மற்றும் மின்சார அமைச்சும் பசுமை நிதியியல் தொடர்பான கொள்கைகளை உருவாக்கி வருகின்றன, இவை பசுமை ஹைட்ரஜனுக்கு மாறுவதற்கும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைப் பயன்படுத்துவதற்கும் எங்களின் திட்டங்களாகும்.
40 ஜிகாவோட் என மதிப்பிடப்பட்ட பசுமை ஹைட்ரஜனுக்கான அதிக வலுசக்தி நம்மிடம் உள்ளது. சில நேரங்களில் அது இன்னும் அதிகமாக இருக்கலாம். மன்னார் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கான குறிப்பிடத்தக்க சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது. ஆனால் அதில் பல பிரச்சினைகள் உள்ளன, அவற்றுக்குத் தீர்வு காண வேண்டும். அங்கு தனியார் துறை முதலீடுகளைப் பெற அவர்களை ஊக்குவிக்க வேண்டும். இந்தியா ஏற்கனவே தனது திட்டங்களில் பசுமை ஹைட்ரஜனை ஏற்றுமதி செய்வதை உள்ளடக்கியுள்ளது, அதற்காக அவர்கள் கணிசமான அளவு பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்து வருகின்றனர்.
மேலும், கடலுக்கு அடியில் புதிய கேபிள் இணைப்புக்கள் கட்டமைக்கப்பட்டு அதனூடாக மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. அதன்படி அவுஸ்திரேலியா – சிங்கப்பூர் , சிங்கப்பூர் – இந்தியாவுக்கும் இடையேயான இணைப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளன. கடலுக்கு அடியில் உள்ள இந்தியா-சிங்கப்பூர் கேபிளை இலங்கையுடன் இணைக்க வாய்ப்பு உள்ளது. பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்தும் பட்சத்தில் இலங்கை வலயத்தின் நீண்டகால விநியோக மத்தியஸ்தானமாக மாறுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.
பசுமை ஹைட்ரஜன் வளங்கள் நிறைந்த பகுதிக்கு அருகில் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் கொழும்பு ஆகிய மூன்று துறைமுகங்கள் நம்மிடம் உள்ளன. இந்தியாவுடன் தரைவழிப் பாதை மற்றும் தென்னிந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே தரைவழி இணைப்பு குறித்தும் ஆலோசித்து வருகிறோம். அதனால் தென்னிந்தியாவை அண்மித்துச் செல்லும் வாய்ப்பு எமக்கு கிடைக்கும். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுசக்தி தொடர்பை பலப்படுத்துவது குறித்து நாம் ஏற்கனவே ஆலோசித்து வருகிறோம். இவை அனைத்தும் சரியாக நடைபெறும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.’