கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம் மக்களின் உடல்களைப் பலவந்தமாக தகனம் செய்யும் அரசாங்கத்தின் செயல்பாடானது, முஸ்லிம் மக்களைப் பழிவாங்கும் வகையிலேயே அமைந்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:
முஸ்லிம் மக்களின் உடல்களைப் புதைக்க முடியும் என்று உலக சுகாதார ஸ்தாபனமே ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் மாத்திரமே அதற்குத் தடை விதித்திருக்கிறது. தனி பௌத்த சிங்கள அரசாங்கத்தை அமைத்துள்ளோம் என்று சில அடிப்படைவாதிகளுக்கு காண்பிப்பதற்காகவே இவ்வாறு முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுகின்றன.
பொலித்தீன் பைகளில் இட்டு உடல்களைப் புதைப்பதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என மருத்துவத்துறையினர் கூட தெரிவித்துள்ளனர். ஆனாலும் அதனை ஏற்றுக்கொள்ளாமல் ஏதேனுமொரு அடிப்படைவாதக் குழுவின் தேவைக்காக முஸ்லிம் மக்களைப் பழிவாங்குவதற்காகவே அரசாங்கம் இவ்வாறு செயல்படுகிறது என்பது தெளிவாகிறது.
சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் கொரோனாவுக்கான தடுப்பூசியை இம்மாத இறுதியில் அல்லது ஜனவரியில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் அரசாங்கம் பானங்களைக் கொடுத்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்காமல் உண்மையில் கொரோனாவுக்கான மருந்து இருந்தால் அதனை தொற்றாளர்களுக்கு கொடுத்து அவர்களை குணப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் எனத் தெரிவித்தார்.