33 C
Colombo
Thursday, March 28, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஊடகவியலாளர்களுக்கு ஆதரவாக ஆஜரான சுமந்திரன்; முதலாவது சந்தேக நபரின் பிணை மனு நிராகரிப்பு!

முல்லைத்தீவு – ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைதொடர்பிலான வழக்கு விசாரணை 03.11.2020 இன்றையநாள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில், நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில், தாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும், சட்டத்தரணிகளான கேசவன் சயந்தன், ருஜிக்கா நித்தியானந்தராசா, துஸ்யந்தி, பார்த்திபன், எஸ்.தனஞ்சயன் ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

இதேவேளை ஊடகவியலாளர்களைத் தாக்கியவர்கள் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் உள்ளிட்டவர்கள் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

இன்றைய வழக்கு விசாரணையில் முதலாவது சந்தேகநபரான அனோஜன் என்பவர் சார்பில் கோரப்பட்ட பிணைவிண்ணப்பம், மற்றும் ஊடகவியலாளர்களைத் தாக்கியமைக்காக கோரிய மன்னிப்பு என்பன நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இன்றைய வழக்கு விசாரணைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் குருத்துத் தெரிவிக்கையில்,

இந்த வழக்குடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்கள் இருக்கின்றனர்.

அதிலே நான்காம், ஐந்தாம் சந்தேக நபர்கள் பின்னர் கைதுசெய்ப்பட்டவர்கள். அவர்களுக்கான அடையாள அணிவகுப்பு நடைபெறவேண்டும். எனினும் இடம்பெறவில்லை.

அதேவேளை இரண்டாம் மூன்றாம் சந்தேக நபர்கள் ஏற்கனவே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் முதலாவது சந்தேகநபரான அனோஜன் என்பவர் பிணையில் விடுவிக்கப்படவேண்டுமென, இன்றைய தினம் அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் ஒரு விண்ணப்பத்தினைச் செய்திருந்தார். நாங்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தோம்.

இது சாதாரணமாக தாக்கிய ஒரு வழக்கு அல்ல, இது சமூகப் பொறுப்போடு செயற்பட்ட ஊடகவியலாளர்கள், தமது சமூகப் பொறுப்பினை நிறைவேற்றுகின்ற போது நிகழ்ந்த ஒரு சம்பவம்.

சமூக விரோத செயற்பாட்டினை அவர்கள் வெளிக் கொணர்வதற்கு முயற்ச்சி எடுத்தபோது அதற்கு எதிராக செய்யப்பட்ட ஒரு தாக்குதலாகும்.

காடழித்தல் செயற்பாடு மிகவும் பாரிய அளவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்போது, வனவளத் திணைக்களம் அதற்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை, போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் இருந்த ஒரு விடயத்தினை ஊடகவியலாளர்கள் வெளிக்கொண்டுவருவதற்காக சென்றபோதுதான் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஆகையல்இவ்விடயத்தினை நீதிமன்று பாரிய சமூக விரோத செயற்பாட்டுடன் தொடர்புடையதாக்கருதவேண்டும் என்கின்ற சமர்ப்பணத்தினைச் செய்திருந்தேன்.

முதலாவது சந்தேக நபர் சார்பிலே, தேவைக்கு அதிகமாக விளக்கமறியலில் வைத்திருக்கக்கூடாது. அவர் விடுவிக்கப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தினைச் செய்திருந்தனர். அவர்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. பிணை வழங்கப்படவில்லை. மூன்று சந்தேக நபர்களையும் இன்னும் பதின் நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் எதிராளிகள் கொவிட் -19காரணமாக நீதிமன்றிற்குக் கொண்டுவரப்படவில்லை. எனினும் நீதிபதியுடன் தொலைபேசியில் உரையாடக்கூடியதாக அவர்கள் தொடர்பினை ஏற்படுத்திக்கொடுத்தார்கள். நீதவான் அவர்களுடன் உரையாடி தனது பதிலை அவர்களுக்கு விளக்கமாகச் சொன்னார்.

அந்தவகையில் முதலாவது எதிரியான அனோஜன் என்பவர், தான் மன்னிப்புக் கேட்கத் தயாராக இருப்பதாகவும் ஊடகவியலாளர்கள் தன்னை மன்னிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ஊடகவியலாளர்கள் சார்பில் நாம், அதை நிராகரித்தோம். சாதாரணமாக ஏற்பட்ட ஒரு தாக்குதல் சம்பவம் எனில் நிச்சயமாக மன்னிப்புக் கொடுகலாம். ஆனால் இது பாரிய சமூக விரோத செயற்பாட்டுடன் தொடர்புடைய ஒரு விடயம். ஆகையினாலே துரதிஷ்டமான விதமாக அவர் மன்னிப்புக் கேட்கின்ற போதும், மன்னிப்பைக் கொடுத்து அவரை விடுவிக்கின்ற ஒரு விடயமாக இதனைக் கருதமுடியாது என்று கூறியிருந்தோம். நீதிமன்றும் அதனை ஏற்றுக்கொண்டு, பிணை விண்ணப்பத்தினை மறுத்து, இந்தமாதம் 17ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது – என்றார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles