கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல முனையங்களில் எரிபொருள் விநியோகம் இன்று காலை 6 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் ஆதரவளிப்பார்கள் என, அமைச்சர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாட்டில் போதியளவு எரிபொருள் இருப்புக்கள் உள்ளதாகவும், ஏப்ரல் மாத விலை திருத்தத்தை எதிர்பார்த்து சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருளை கொள்வனவுசெய்யவில்லை எனவும் அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எரிபொருள் விநியோகம், வழமைபோன்று இடம்பெறுவதாக, இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் மற்றும் கனிய எண்ணெய் மொத்த களஞ்சிய முனைய நிறுவனம் ஆகியவற்றின் தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமைக்கு மத்தியில், உச்சபட்ச எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படுவதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் தெரிவித்துள்ளது.
இதேவேளை கனியவளக் கூட்டுத்தாபன தொழிற்சங்கம் ஆரம்பித்துள்ள போராட்டம், தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக, பொதுஜன முற்போக்கு ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் பந்துல சமன் குமார தெரிவித்துள்ளார்.