சில தினங்களுக்கு முன்னர் தமிழ்த் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் தலைவர்களை இலங்கைக் கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா சந்தித்திருந்தார். இதன்போது, ஜனாதிபதித் தேர்தல் உள்ளடங்கலாக பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருக்கின்றன.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியாவால் மட்டும்தான் சில தலையீடுகளை செய்ய முடியுமென்னும் விடயமும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. கலந்துரையாடலின்போது, ஒரு கட்டத்தில் வடக்கு – கிழக்கில் சீனாவின் உள்நுழைவு தொடர்பிலும் பேசப்பட்டிருக்கின்றது. இந்த விடயத்தில் இந்தியாவின் கரிசனைகள் நியாயமானவைதான். ஏனெனில், இந்தியாவின் அயல்நாடுகளில் சீனா அளவுக்கதிகமாக உள்நுழைய முயற்சிப்பது தொடர்பில் இந்தியா கவலை கொண் டிருக்கின்றது.
ஆனால், இந்த விடயத்தில் ஈழத் தமிழர்களால் என்ன செய்ய முடியும்? வடக்கு – கிழக்கில் தமிழ் மக்கள் அதிகாரத்தோடு இல்லை. இந்த நிலையில் சில அறிக்கைகளை வெளியிடும் நிலையைத் தாண்டி தமிழ்த் தேசிய கட்சிகளால் என்ன செய்துவிட முடியும்? ஏனெனில், அனைத்து முடிவுகளும் கொழும்பில் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த முடிவுகளின் அடிப்படையில் வெளியாரின் தலையீடுகள் நிகழ்கின்றன. இந்த விடயத்தில் தமிழ் மக்கள் வெறும் பார்வையாளர்கள் மட்டுமே. இந்த விடயத்தை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும்.
வடக்கு – கிழக்கிலுள்ள மாகாண சபைகள் இயங்க வேண்டும். இது முதல் கட்டம் என்றால் அடுத்த கட்டமாக, அரசமைப்பிலுள்ள பதின் மூன்றாவது திருத்தச்சட்டத்திலிருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்கள் உள்ளடங்கலாக அனைத்தும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அது தமிழ் மக்களுக்கான இறுதி அரசியல் தீர்வு அல்ல. ஆனால், அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் வடக்கு – கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அதிகார அரசியலில் குரலுள் ளவர்களாக மாறுவர்.
இவ்வாறானதொரு சூழல் இருக்கின்றபோதுதான் சீனாவின் உள்நுழைவுகள் தொடர்பில் தமிழ் அரசியல் தரப்புகள் தீர்க்கமான கொள்கை நிலைப்பாடுகளை மேற்கொள்ள முடியும். எனவே, வடக்கு – கிழக்கில் தமிழ் மக்கள் அதிகாரமுள்ள தரப்பாக இருக்கக் கூடிய சூழலை இந்தியா ஏற்படுத்த வேண்டும். அதிகாரமற்ற ஒரு தரப்பால் எவ்விதமான தலையீடுகளையும் மேற்கொள்ள முடியாது.
இந்த விடயங்களை கருத்தில் கொண்டு தமிழ் மக்கள் விவகாரத் தில் இந்தியா காத்திரமான தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும். வடக்கு – கிழக்கில் மாகாண சபைகள் இயங்கக்கூடிய நிலைமையை ஏற்படுத்த வேண்டும். இந்தியா இதற்கான அழுத்தங்களை பிரயோ கிக்க வேண்டும். பொருளாதார நெருக்கடியின்போது இந்தியா வழங்கிய உதவியால்தான் இலங்கை மூச்சுவிட முடிந்தது. எனவே, இந்தியாவுக்கு ஏனைய எந்தவொரு நாட்டைவிடவும் தலையிடும் – அறிவுரை கூறும் தகுதியும் ஆற்றலும் உண்டு. இதனை அடிப்படை யாகக் கொண்டு வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் அதிகாரமுள்ள ஒரு தரப்பாக இயங்கக்கூடிய நிலைமையை இந்தியா ஏற்படுத்த வேண் டும். அப்போதுதான், வடக்கு – கிழக்கில் சீனாவின் தலையீடுகள் தொடர்பில் தமிழ்த் தேசிய அரசியல் தரப்புகள் காத்திரமான கொள் கைசார் தீர்மானங்களை நிறைவேற்ற முடியும்.