சுகாதார சவாலை முறியடிப்போம் – வீடுகளிலிருந்தே தீபாவளியை கொண்டாடுவோம் – சம்பந்தன்

0
485

நாட்டில் தற்போது வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இந்து சமய மக்கள் அனைவரும் இவ்வருட தீபாவளியை வீட்டிலிருந்தவாறே கொண்டாடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவித்தவை வருமாறு: இந்துக்களது பாரம்பரியப் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகையானது இம்மாதம் 14 ஆம் திகதி உலக வாழ் இந்துக்களால் கொண்டாடப்படவுள்ளது.

தற்போது நாடு எதிர் நோக்கியுள்ள கொரோனா திடீர்ப்பரவல் காலப்பகுதியில் வரும் இந்தப் பண்டிகை நாளில் நாம் கூட்டுப்பொறுப்புடன் நடந்துகொள்வது அனைவரது நல்வாழ்வுக்கும் அவசியம்.

எனவே, எமது வீடுகளிலுள்ள முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் நாட்பட்ட நோய்களுடன் வாழும் உறவுகள் ஆகியோரைக் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க எம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள இந்தப் பண்டிகை தினத்தை அவரவர் வீடுகளிலிருந்து மிகவும் அமைதியாகக் கொண்டாடுமாறு எமது மக்களிடம் நாம் உரிமையோடு வேண்டிக்கொள்கிறோம்.

அயலவர்கள் மற்றும் உறவினர் வீடுகளுக்குச் செல்வதையும், புத்தாடைகள் மற்றும் அணிகலன்கள் வாங்கச் செல்வதையும் ஆலயங்களுக்குச் செல்வதையும் இவ்வருடம் தவிர்த்து வீட்டிலிருந்தவாறே பிரார்த்தனைகளில் ஈடுபடுவதன் மூலம் எம்மை எதிர்நோக்கியுள்ள சுகாதாரச் சவாலை முறியடிப்போம் எனத் தெரிவித்தார்.