தொல்பொருள் சார்ந்த அமைச்சர், இனவாத செயற்பாடுகளையே மேற்கொண்டு வருகின்றார் எனவும், நீதிமன்றத்தை அவமதித்த அமைச்சருக்கு எதிராக, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில், இவ்வாறு குறிப்பிட்டார்.
‘தொல்பொருள் சார்ந்த அமைச்சரைப் பற்றி கதைப்பதில், இங்கு எவ்வித பிரயோசனமும் இல்லை. அவர் ஓர் இனவாதி. அவரின் செயற்பாடுகள் அனைத்தும், இனவாத செயற்பாடுகளாகவே இடம்பெற்று வருகின்றன. தொல்பொருள் திணைக்களம் மற்றும் இதனுடன் சம்பந்தமான காணி அபகரிப்பு, இவ்வாறான விடயங்கள் தொடர்பாக, நாம் அமைச்சர்களுடன் மற்றும் ஜனாதிபதியுடன் பேசியும் எந்த பயனும் இல்லாத காரணத்தினால், எமது தமிழரசு கட்சியை சேர்ந்த சுமந்திரன், நீதிமன்றத்தை நாடியிருந்தார். ஆனாலும் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதியே, நியாயமான தீர்ப்பின் காரணமாக, நாட்டைவிட்டு அகதியாக தப்பிச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்கு தள்ளப்பட்டார். இதில் சம்பந்தப்பட்ட அமைச்சர், நீதிமன்ற உத்தரவுகளையும் தாண்டி மிகப் பாரதூரமான இனவாத செயற்பாடுகளில், தற்பொழுதும் ஈடுபட்டு வருகின்றார். எங்கு மலை இருந்தாலும், அதனை கையகப்படுத்த முயல்கிறார். இராணுவ துணையோடு பல அட்டூழியங்களை மேற்கொள்கின்றார். எனது கோரிக்கை யாதெனில், இவ்வாறு நீதிமன்ற தீர்ப்பை மீறி நீதிமன்றத்தை அவமதித்த அமைச்சருக்கு எதிராக, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கிழக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில், காணி தொடர்பான பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.
ஆனால், அவற்றை அதற்குரிய அமைச்சர் நிவர்த்தி செய்வது என்பது இயலாத காரியம். அதனால்தான் நாங்கள் எப்பொழுதும் வலியுறுத்தி கூறிக்கொண்டு வருகின்றோம், காணி தொடர்பான உரிமையை, அதிகார பகிர்வை, நமது மாகாண சபைக்கு வழங்கி, மாகாண சபை மூலம் இவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.