பாடசாலைகளை மூடியதன் விளைவு, குழந்தைகளின் கல்வியில் பல ஆண்டுகளுக்குத் தாக்கம் செலுத்தக்கூடும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு சுட்டிக்காட்டினார்.
இந்தச் செயலணிக்கூட்டத்தில் ஜனாதிபதி மேலும் தெரிவித்தவை வருமாறு:
கொரோனா வைரஸ் தொற்று சுகாதாரம், பொருளாதார மற்றும் சமூக ரீதியாக, முழு உலகிலும் பல விதங்களில் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் முதல் கொரோனா தொற்றுக்குள்ளாகிய நபரை கடந்த மார்ச் மாதம் அடையாளம் கண்ட நாளிலிருந்து, மக்களின் பாதுகாப்பிற்காக ஒரு அரசாங்கமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
இருப்பினும், இத்தொற்று கிருமிக்கு எதிராக நிரந்தர சிகிச்சை(மருந்து) இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், நாம் இனி நாட்டை முற்றாக மூடிவிட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்க முடியாது.
பாடசாலைகளை மூடியதன் விளைவு குழந்தைகளின் கல்வியில், பல ஆண்டுகளுக்குத் தாக்கம் செலுத்தக்கூடும். மேலும், அன்றாடம் தொழில் செய்பவர்கள் மற்றும் வர்த்தக
சமூகத்தினர் மீது கொரோனா பாரியளவில் தாக்கத்தை செலுத்தியுள்ளது.
எனவே, இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கையர்களாகிய நாம் அனைத்து அரசியல் சித்தாந்தங்களையும் வேறுபாடுகளையும் களைந்து நாட்டின் முன்னேற்றத்துக்காக ஒன்றுபட வேண்டும்.
சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம், நல்ல சுகாதாரப் பழக்கவழக்கங்களையும் வழிகாட்டுதல்களையும் பின்பற்றுவதன் மூலம், கொரோனாவைத் தோற்கடிக்க முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.