மட்டக்களப்பு மாநகர சபையின் 59வது அமர்வுக்கான (49வது பொதுக் கூட்டம்) நேற்று மட்டக்களப்பு மாநகர சபையில் இடம்பெற்றது.
சபை அமர்வுகளில் கடந்த சபை அமர்விற்கான கூட்டறிக்கை அங்கீகரிக்கப்பட்டதுடன், முதல்வர் அறிவிப்புக்கள் சபையில் முன்வைக்கப்பட்டது. இதன்போது மாநகர சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆணையாளரான என்.மதிவண்ணன் முதல்வரினால் வரவேற்கப்பட்டார்.
சபைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய நிதிக் குழுவின் சிபார்சுகள், முதல்வரின் முன்மொழிவுகள், உறுப்பினர்களால் கொண்டு வரப்படும் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன.
மாணவர்களுக்கான சிகை அலங்காரத்தின் போது மாநகர எல்லைக்குள் செயற்படுகின்ற சிகையலங்கார நிலையங்களில் பாடசாலை நடைமுறைக்கு ஒப்பான ஓர் நடைமுறையை கைக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மாநகர எல்லைக்குள் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் அறநெறிப் பாடசாலைகள் நடைபெறுகின்ற பகல் வேளையில் ஏனைய பிரத்தியேக வகுப்புகள் நடாத்தப்படுவதை தடை செய்வதற்கும் என இவ்விருவிடயங்களுக்குமான சபை அனுமதியைக் கோரிய மாநகர சபை உறுப்பினர் கந்தசாமி ரகுநாதன் சமர்ப்பித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
புதிய ஆணையாளருக்கான அதிகாரங்கள் மற்றும் பொறுப்புக்களும் இதன்போது முன்வைக்கப்பட்டு அதற்கான சபை அனுமதி வழங்கப்பட்டதுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களினால் சபைக்கு கொண்டுவரப்படடம பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கவேண்டும் என்று கோரும் பிரேரணையும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இறுதியாக புதிய உறுப்பினராக தினம் சத்தியப்பிரமானம் மேற்கொண்ட சி.மேகராஜின் கன்னி உரையினைத் தொடர்ந்து சபை அமர்வுகள் முதல்வரினால் நிறைவிற்கு கொண்டுவரப்பட்டது.