மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச மட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ நிறுவனத்தின் அனுசரணையுடன் பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் பாவனையைத் தடுப்போம் எனும் விழிப்புணர்வு நடைபவனி காத்தான்குடி நகரில் இன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ நிறுவனம் முன்னெடுத்து வரும் சூழல் தொகுதியை பாதுகாப்பதற்கும் மற்றும் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதுற்குமான சமூக அடிப்படை உள்வாங்கல் அபிவிருத்தி நடைமுறைபடுத்தல் திட்டத்தின் கீழ் காத்தான்குடி நகரசபை முன்னெடுத்து வரும் நகரை பசுமைபடுத்தும் திட்டத்திற்கு அமைய காத்தான்குடி பிரதேச மட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் காத்தான்குடி நகரசபை மற்றும் பிரதேச செயலகம் இணைந்து விழிப்புணர்வு நடைபவனி மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுர விநியோக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ நிறுவன பிரதி செயலாளர் பற்றிக் தலைமையில் காத்தான்குடி நகரசபை முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட விழிப்புணர்வு நடைபவனி மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி ஊடாக காத்தான்குடி கலாசார மண்டபம் வரை இடம்பெற்றது.
நிகழ்வில் காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் பி.ராஜ்மோகன் வை.எம்.சி.ஏ நிறுவன நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் சுபேந்திரன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.