மானிப்பாயில் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்ற வன்முறைக்குக் கும்பல்- ஒருவரை மடக்கிப்பிடித்த இராணுவம்

0
496

யாழ்ப்பாணம், மானிப்பாயில் பலசரக்கு கடை ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக்குக் கும்பல் உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தியதுடன், கடையிலிருந்த பொருள்களையும் அடித்துச் சேதப்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று மாலை 6.30 மணியளவில் மானிப்பாய்ச் சந்திக்கு அண்மையில் பொன்னாலை வீதியில் இடம்பெற்றது.
மோட்டார் சைக்கிள்களில் வந்த வன்முறைக் கும்பல் கடைக்குள் புகுந்து உரிமையாளரின் கழுத்தில் தாக்கியுள்ளது.

அத்தோடு கடையிலிருந்த பொருள்கள் மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திவிட்டு தப்பிக்க முற்பட்ட வேளை, அவ்வழியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவத்தினர் அக்கும்பலைப் பிடிக்க முயன்றனர்.

இருப்பினும் ஒருவரை மட்டுமே இராணுவத்தினரால் பிடிக்க முடிந்தது. ஏனையோர் தப்பித்துள்ளனர். அத்துடன் அக்கும்பல் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் ஏனையவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.