மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டின் அலுவலகம் மற்றும் அவரின் உறவினர்களின் வர்த்தக நிலையம் என்பன நேற்றிரவு எரிக்கப்பட்டு அவருக்கு எதிராக மக்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரினால் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
நேற்று இரவு ஏறாவூர் பிரதான வீதியில் உள்ள உள்ள முன்னாள் அமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட்டின் அலுவலகத்தினை முற்றுகையிட்ட பெருமளவான பொதுமக்கள் குறித்த அலுவலகத்தினை தீவைத்து எரித்தனர்.
அதனை தொடர்ந்து அதற்கு அருகில் உள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சரின் சகோதரனின் வர்த்தக நிலையமும் அடித்து உடைக்கப்பட்டு தீயிட்டு கொழுத்தப்பட்டன.
அத்துடன் வீதிகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட்டின் பதாகைகளும் உடைக்கப்பட்டு தீயிட்டு கொழுத்தப்பட்டதுடன் அவருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுவந்தன.
இதனிடையே புன்னைக்குடா வீதியில் அமைந்துள்ள அமைச்சரின் மூன்று ஆடைத்தொழில்சாலைகளும் சேதமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொலிஸார் குவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் நிலைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் மேலதிக இராணுவத்தினரும் அழைக்கப்பட்டு பாதுகாப்பினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் வகையில் பொலிஸாரினால் கண்ணீர்புகைக்குண்டு தாக்குதல்களும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மேலதிக கலகமடக்கும் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டு இன்று அதிகலை ஏறாவூர் நகரின் பாதுகாப்பு முழுமையாக கட்டுப்படுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுவருகின்றனர்.