ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் தகுதிவாய்ந்த குடும்பங்களுக்கு இம்முறையும் ரூபாய் 5,000 வாழ்வாதார கொடுப்பனவு பெற்றுக் கொடுப்பதற்கு பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி தீர்மானித்துள்ளது.
“அத்தியாவசிய உணவுப்பொதி கிடைக்கப்பெறாத மற்றும் ஊரடங்கு சட்டம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தகுதிவாய்ந்த குடும்பங்களுக்கே இந்தக் கொடுப்பனவு பெற்றுக்கொடுக்கப்படும்” என பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அலரி மாளிகையில் நேற்று முன் தினம் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நீர், மின்சாரம், எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவை மற்றும் அத்தியாவசிய வாழ்வாதார நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுத்து செல்வதுடன் தமது தொழில் பாதுகாப்புக்கு சுகாதார வழிகாட்டல்களுக்கு முன்னுரிமை வழங்கி செயற்படுமாறும் பசில் ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்களுக்கு அத்தியாவசியமான உணவு பொருட்களை பெற்று கொடுக்கும் செயற்பாட்டிற்காக பொருளதார மத்திய நிலையங்களை சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய திறப்பதற்கான அவசியம் காணப்படுவதாகவும் இந்த கலந்துரையாடலின் போது வலியுறுத்தப்பட்டது. ஆபத்தற்ற, சுகாதார பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு ஆபத்தற்ற பொருளாதார மத்திய நிலையம் என உறுதிசெய்யப்பட்ட பொருளாதார மத்திய நிலையங்களை திறப்பதற்கான முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.