வரலாற்று சிறப்புமிக்க அனுராதபுரம் ருவான்வெளிசேய தாது கோபுரத்தின் சூடா மாணிக்கம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கடந்த வாரம் ஆரம்ப விசாரணைகளை நடத்தியதாகவும் இலங்கை மனித உரிமை ஆணைக் குழு தெரிவித்துள்ளது.
மனித உரிமை ஆணைக்குழுவின் மூன்று அதிகாரிகள் ருவான்வெளிசேய இருக்கும் அனுராதபுரத்திற்கு சென்று இது தொடர்பான ஆரம்ப விசாரணைகளை நடத்தி யுள்ளதுடன் அதன் அறிக்கையை இன்று ஆணைக்குழுவின் தலைவரிடம் கையளிக்க உள்ளனர்.
பௌத்த சமயத்தை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு அரசியலமைப்பு ரீதியாக வழங்கப்பட்டுள்ளதுடன் அதனை அடிப்படையாக கொண்டு ருவான் வெளிசேய தாது கோபுரத்தின் சூடா மாணிக்கம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கூறி, தொல் பொருள் திணைக்களம், பௌத்த சமய விவகார ஆணையாளர், கலாசார விவகார திணைக்களம் உட்பட 7 தரப்பினரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு, மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாட்டுக்கு அமைய அனுராதபுரம் ருவான்வெளிசேயவுக்கு வருகை தருமாறு மனித உரிமை ஆணைக்குழு, பிரதிவாதிகள் தரப்பு கடந்த வாரம் அறிவித்திருந்த போதிலும் எவரும் சமூகமளிக்கவில்லை என தெரியவருகிறது.
இதனால், விசாரணைகளுக்கு வருகை தருமாறு மீண்டும் அந்த தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இது சம்பந்தமாக விரிவான விசாரணைகளை நடத்த உள்ளதாகவும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.