நாளை ஆரம்பமாகவுள்ள வாரத்தில் சகல அரச மற்றும் அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலைகளில், மூன்று நாட்களுக்கு மாத்திரம் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, திங்கள், செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் மாத்திரம் பாடசாலைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த வாரம் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பாடசாலை செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் எதிர்வரும் வியாழக்கிழமை அரச விடுமுறை தினமாகும் என்பதால், அடுத்த வாரம் புதன்கிழமை பாடசாலை செயற்பாடுகளை முன்னெடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. வெள்ளிக்கிழமை மாணவர்களுக்கு வீட்டுப் பாடங்களை வழங்குதல் அல்லது இணையவழியில் கற்பித்தல் பணிகளை முன்னெடுக்க முடியும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, வடமாகாணத்தில், நாளை முதல், 5 நாட்களும் பாடசாலைகளை இயக்கத் தீரமானிக்கப்பட்டுள்ளதாக, மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தூரப்பிரதேசங்களில் உள்ள ஆசிரியர்கள், வாரத்தில் 3 நாட்களுக்கு மாத்திரம் பாடசாலைக்கு செல்ல அனுமதி வழங்கப்படுவதாகவும் வட மாகாண கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.