மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவில் ஓமடியாமடு பிரதேசத்தில் பயணத் தடையை மீறி சட்ட விரோதமான முறையில் அனுமதிப்பத்திரங்களின்றி விற்பனைக்காக தென்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்ட மணல் ஏற்றிய வாகனங்களை மட்டகளப்பு குற்றப் புலனாய்வு பொலிஸ் பிரிவின் தலைமையிலான குழுவினர் இன்று கைப்பற்றியுள்ளனர்.
மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸ் பரிசோதகர் பி.எஸ்.பி.பண்டார ,உப பொலிஸ் பரிசோதகர் எம்.பிரதிப்,வாகரை மற்றும் வாழைச்Nனை பொலிஸ் உத்தியோஸ்த்தர்கள் இணைந்து இன்று அதிகாலை 3 மணியளவில் மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போது இவை கைப்பற்றப்பட்டதாக மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸ் பரிசோதகர் பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.
இதன்போது ரிப்பர் ரக பாரவூர்தி-06, உழவு இயந்திரங்கள்-08 உம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சாரதிகளும் கைது செய்யப்பட்டு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் மற்றும் சாரதிகளை வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதி மன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸ் பரிசோதகர் பி.எஸ்.பி.பண்டார மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இதே பிரதேசத்தில் வைத்து நேற்று வாழைச்சேனை விசேட அதிரடிப் படையினரால் மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரங்கள் -05 ,ரிப்பர் ரக பாரவூர்திகள்-02 கைப்பற்றப்பட்டு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் நீதி மன்ற நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுன தெரிவித்தார்.
இதன்போது -08 சாரதிகளும் கைது செய்யப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மேலும் அவர் தெரிவித்தார்.
ஓமடியாமடு பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருவதாகவும் வழங்கப்பட்ட அனுமதி பத்திரத்திற்கு மேலதிகமாக மணல் ஏற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இதனால் தங்களது விவசாய செய்கை பாதிக்கப்படுவதுடன் வெள்ளப்பாதிப்பு,வீதிகள் பழுதடைதல் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த காலங்களில் பிரதேச மக்களால் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இவ்வாறானதொரு நிலையில் பெருமளவிலான மணல் ஏற்றிய வாகனங்கள் கைப்பற்றப்பட்டமை பிரதேச மக்களிடேயே மகிழ்சியளித்துள்ளதாக பொலிஸாருக்கு பாராட்டும் தமது நன்றியையும் தெரிவித்துள்ளனர்.