இப்படியும் நடக்கிறது…!

0
172

நெடுந்தீவில் நடந்த கொடூர படுகொலைகள் முழு யாழ்ப்பாணத்தையும் மாத்திரமல்ல ஒட்டுமொத்த தமிழர் பகுதிகளையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கின்றது.
படுகொலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் எழுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது மாத்திரமல்ல, கடற்படையின் முகாமுக்கு ஒரு சில மீற்றர் தூரத்திலேயே
இந்தச் சம்பவம் நடந்திருப்பதும் கவனிக்கத்தகக்கது.
சம்பவம் நடந்த உடனேயே குற்றவாளிகளை கைதுசெய்யக்கோரி அங்கு போராட்டம் நடைபெற்றிருக்கின்றது.
குற்றவாளிகளை உடனே கைதுசெய்ய பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
சனிக்கிழமை காலையில் இவர்கள் வெட்டுக்காயங்களுடன் வீட்டில் காணப்பட்ட செய்தி வெளியே வந்ததைத் தொடர்ந்து நெடுந்தீவுக்கான படகுச் சேவை இரத்துச்
செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கொலைஞர்கள் படகுச் சேவை இரத்துச் செய்யப்படும்வரை நெடுந்தீவிலேயே தங்கியிருந்திருப்பார்களா என்பது தெரியவில்லை.
சம்பவத்தில் காயமடைந்த ஆறாம் நபர் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.
தொண்ணூற்று எட்டு வயதான அவர், புலம்பெயர்ந்து வெளிநாடொன்றில் வாழ்ந்தவர் என்றும் அங்கு வந்து உறவினர்களுடன் தங்கியிருந்திருக்கிறார் எனவும் கூறப்படுகின்றது.
அவர் நலமடைந்த பின்னர்- ஆகக்குறைந்தது அவர் நினைவு திரும்பி நடந்த சம்பவத்தை சொல்லக்கூடிய நிலைக்குத் திரும்பினால் கொலையோடு தொடர்புடைய பல உண்மைகள் தெரியவரலாம்.
இந்தப் பத்தியை எழுதிக்கொண்டிருந்த போது கொலையாளி என்று சந்தேகிக்கப்படும் ஒருவரை புங்குடுதீவில் பொலிஸார் கைது செய்திருக்கின்றனர்.
அவர் தனி ஒருவராக இத்தனை கொலைகளையும் செய்திருக்க முடியுமா என்பதும் தெரியவில்லை.
விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் அதுபற்றி மேலும் பேசுவது சரியாக இருக்காது.
அதுவல்ல, நாம் இன்று இந்தப் பத்தியில் சொல்ல வருவது.
இந்தச் சம்பவத்தை எழுதுகின்றபோது, அண்மைக் காலமாக யாழ்ப்பாணத்தில் நடந்த பல வாள்வெட்டுச் சம்பவங்கள் பற்றிய விசாரணைகளில் வெளிவந்த ஒரு
விடயம் ஞாபகத்துக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
அண்மையில் புலம்பெயர் தேசம் ஒன்றிலிருந்து அனலைதீவுக்கு வந்து தங்கியிருந்த ஒருவர் மீது தாக்குதல் நடத்துவதற்காக அங்கு வந்திருந்த இருவரை பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.
அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட பின்னர், கனடாவிலிருந்து தமக்கு பணம் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்ட நபர்மீது தாக்குதல் நடத்துவதற்காக இந்தியாவிலுள்ள நணபர் ஒருவர் மூலம் தம்முடன் தொடர்பு கொள்ளப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
ஆக, புலம்பெயர் நாடுகளில் வாழும் நம்மவர்கள் தமக்கு வேண்டப்படாத யாரையேனும் தாக்குவதற்கு இப்போது யாழ்ப்பாணத்தில் இயங்கும் வாள்வெட்டு குழுக்களை தொடர்புகொள்கின்றார்கள் என்பது தெரியவந்திருக்கின்றது.
அனலைதீவில் நடந்தது போன்ற பல சம்பவங்களில் இதுபோன்று புலம்பெயர்ந்தவர்களின் பணத்துக்காக தாக்குதல் நடந்த சம்பவங்கள் பல பதிவாகியிருக்கின்றன.
இதுபோன்ற சம்பவங்கள் தொடருமானால், புலம்பெயர்ந்தவர்கள் இனி தாயகத்துக்கு வருவதையே ஆபத்தானதாகக் கருதத் தொடங்கிவிடுவார்கள்.
ஆரம்பத்திலேயே இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருப்பதற்கான நடவடிக்கையை எடுத்தாக வேண்டும்.
ஆனால், எவ்வாறு இதனை தடுக்கலாம் என்பது பற்றியோ அல்லது அதனை தடுக்கவேண்டும் என்று சிந்திப்பதற்கோ யாரும் இருப்பார்கள் என்றும் நம்பிக்கைகொள்ள முடியவில்லை.
எங்கே போகின்றது நமது மண் என்று அங்கலாய்ப்பதைத் தவிர வேறு எதனையும் செய்யமுடியவில்லை.!

  • ஊர்க்குருவி