மாத்தறை, களுத்துறை ஆகிய மாவட்டங்களின் இருவேறு பிரதேசங்களில் மூவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று விடுத்துள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக மாத்தறை கந்தர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலல்ல பிரதேசத்தில் கடலில் குளிப்பதற்காக சென்ற குழுவினரில் இருவர் நீரில் மூழ்கியுள்ளதுடன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்றையவரது சடலத்தை மீட்கும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
தலல்ல தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் 42 வயது நபரின் சடலத்தை மீட்கும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, களுத்துறை பண்டாரகம உயவத்த வாவியில் குளிப்பதற்காக சென்ற 19 வயது இளைஞர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரேதப் பரிசோதனைக்காக ஹொரண வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.