இலத்திரனியல் உபகரணங்களுக்குள் மறைத்துக் கொண்டுவரப்பட்ட 12 கிலோ நிறையுடைய குஷ் போதைப்பொருளுடன் இலங்கையைச் சேர்ந்த 3 பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் திங்கட்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து குஷ் போதைப்பொருளுடன் வர்த்தகர்களுக்கான விசேட பாதையினடாக வெளியேற முயன்ற போதே சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் கொழும்பு கொலன்னாவையைச் சேர்ந்த 46 வயதுடைய தாயும் அவரது 18 வயதுடைய மகளும் ஆவார். மற்றைய பெண் வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 56 வயதுடைய வியாபாரத்தில் ஈடுபடும் பெண் ஆவார்.
சந்தேகநபர்கள் 12 கிலோ நிறையுடைய குஷ் போதைப்பொருளை தாய்லாந்தில் கொள்வனவு செய்து 12 குளிரூட்டிக்குள் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைத்து இந்தியாவின் சென்னைக்கு வந்து அங்கிருந்து திங்கட்கிழமை (19) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து கட்டுநாயக்க விமான நிலைய சி.சி.ரி.வி. கமெராக்களை பரிசோதித்த சுங்க அதிகாரிகள் குறித்து 3 பெண்களும் இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் இதே முறையில் போதைப்பொருட்களை நாட்டுக்கு கடத்திக்கொண்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களையும் கைதுசெய்யப்பட்ட மூன்று பெண்களையும் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
