உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் அதனை தடுக்கத் தவறியதாக கூறி தன்னை கைதுசெய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முயற்சிப்பதாகவும் அதனை தடுக்க உத்தரவொன்றினை பிறப்பிக்கக் கோரியும் குற்றப்புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரும் மத்திய விசாரணை பணிப்பகத்தின் தற்போதைய பணிப்பாளருமாகிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்தது.
இந்த மனு வியாழக்கிழமை (22) உயர்நீதிமன்ற நீதியரசர் ஜனக் டீ.சில்வா தலைமையிலான பிரியந்த பெர்னாண்டோ மற்றும் சம்பத் அபேவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்களை உள்ளடக்கிய அமர்வு முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே, குறித்த மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் திகதி தீர்மானிக்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்கூட்டிய தகவல்கள் கிடைத்திருந்த போதிலும் சஹ்ரான் ஹாஷிம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்கவில்லையென கூறியே குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை கைது செய்ய முயற்சிகள் இடம்பெறுவதாக கூறியே இந்த மனு ஷானி அபேசேகரவினால் தாக்கள் செய்யப்பட்டது.
குளியாப்பிடிய நீதிவான் நீதிமன்றத்திலேயே இது தொடர்பிலான பீ அறிக்கொயொன்று தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் அதன்படி தன்னை கைது செய்ய குற்றப்புலனாய்வுப் பிரிவு முயற்சிப்பதாகவும் அதனை தடுத்து நிறுத்த உத்தரவொன்றினை பிறக்குமாறும் ஷானி அபேசேகர இந்த மனு ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பிலான மனுவே நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு எதிர்வரும் ஒக்டோபர் 16 அம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.