என்னை பற்றி ஜனாதிபதிக்கு தெரியும் – அர்ஜுன

0
113

என்னை பற்றி ஜனாதிபதிக்கு தெரியும் என்பதால் கிரிக்கெட் இடைக்கால குழு நியமனம் தொடர்பில் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என நம்புவதாக கிரிக்கெட் இடைக்கால குழுவின் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

புதிய நியமனத்தை பெற்றுக்கொண்டதன் பின்னர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு வந்த அவர், அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் என்ற ரீதியில் தான் தோல்வியடையவில்லை என்பது ஜனாதிபதிக்கு நன்றாகவே தெரியும் எனவும் அர்ஜுன ரணதுங்க மேலும் தெரிவித்தார்.

இடைக்கால கிரிக்கெட் குழுவின் தலைவர் தனது எதிர்கால பணிகள் குறித்தும் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமைச்சரினால் வழங்கப்படும் நியமனங்களில் தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்வதற்கு மாத்திரமே எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தனது நியமனத்துடன், தற்போது அவுஸ்திரேலியாவில் இருக்கும் இலங்கையின் 6 முன்னாள் வீரர்கள் என்னை அழைத்து,  எந்த நேரத்திலும் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தாக அவர் தெரிவித்தார்.

தற்போது ஓய்வு பெற்ற 80 இலங்கை வீரர்கள் உள்ளதாகவும், எதிர்காலத்தில் இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு அவர்களின் ஆதரவை பெறுவேன் என்றும் கிரிக்கெட் இடைக்கால குழுவின் தலைவர் தெரிவித்தார்.

தற்போது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் சுற்றுலாப் பயணிகளாக மாத்திரம் இருக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு நியமனம் ஐ.சி.சி.யுடன் தொடர்புடைய விடயம் அல்ல என சுட்டிக்காட்டிய  அர்ஜுன ரணதுங்க, கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய அமைச்சரினால் சட்டரீதியாக இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், இனிவரும் ஐ.சி.சி கூட்டங்களில் பங்குபற்ற எதிர்பார்க்கவில்லை எனவும்,  உபாலி தர்மதாச பங்கேற்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் தேவையற்ற விடயங்களின் வருகையினால் இலங்கை கிரிக்கட் அழிந்து போனதாகவும் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

மேலும், கிரிக்கெட் நிறுவன ஊழியர்களுக்கு விடுமுறையில் இருக்க முடியாது என தெரிவித்த  அர்ஜுன ரணதுங்க, பயிற்சியாளர்கள் குளிரூட்டப்பட்ட அறைகளில் தங்குவதற்கு வாய்ப்பில்லை, அவர்கள் விளையாட்டு மைதானத்தில் இருக்க வேண்டும் என்றார்.

அதேபோல், இலங்கை கிரிக்கெட்டை மீட்க இதுவே தனது கடைசி முயற்சி என்றும்  அர்ஜுன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டை மீட்பதற்காக தாம் செய்யும் காரியங்களில் வீரர்களின் ஒழுக்கம் மிக முக்கியமானது என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட்டை மீட்பதற்கான தனித்துவமான திட்டம் தன்னிடம் இருப்பதாகவும், அது முறையாக மேற்கொள்ளப்படும் எனவும் அர்ஜுன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர்களாக இலங்கை அணியின் முன்னாள் வீரர்களை பயன்படுத்துவது மிகவும் பொருத்தமானது என கிரிக்கெட் இடைக்கால குழு தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.