நாட்டின் கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான கப்பல்கள் தொடர்பில் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் கவனத்தில் கொள்ளவேண்டிய விடயங்கள் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை பெறுவதற்கும், அது தொடர்பான பத்திரிகை விளம்பரங்களை வெளியிடுவதற்கும் இரண்டு வார கால அவகாசம் வழங்க தீர்மானிக்கப்பட்டது.
இந்த விசேட தெரிவுக்குழு செவ்வாய்க்கிழமை (27) கூடவுள்ளது.
கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளாகி மூழ்கிய எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் சரக்கு கப்பல் விபத்து மற்றும் அது பற்றி சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விரிவான விசாரணையை நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து சாட்சிகளை பெற்றுக்கொள்வதற்கும் நாட்டின் கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் ஆகிய கப்பல்கள் தொடர்பாக ஆராய்ந்து தேவையான விதப்புரைகளை சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது.
எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பாராளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட தெரிவுக்குழு கடந்த வாரம் அதன் தலைவர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தலைமையில் முதல் தடவையாக கூடியது.
குழுவின் எதிர்கால செயற்பாடுகள் குறித்த அடிப்படை விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து மற்றும் அது தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்தல், சுற்றுச்சூழல் பாதிப்புகள், ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதா, அது தொடர்பில் அரச பொறிமுறையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக குழுவின் தலைவர் அமைச்சர் ரமேஷ் பத்திரண இதன்போது தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைகளை தவிர்ப்பதற்கும் அவ்வாறான அவசர நிலையை எதிர்கொள்வதற்கும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இந்தக் குழு பரிந்துரைகளை வழங்கும் என்றும் தலைவர் தெரிவித்தார்.
குழுவின் கவனத்தில் கொள்ளவேண்டிய விடயங்கள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை பெறுவதற்கும் அது தொடர்பான பத்திரிகை விளம்பரங்களை வெளியிடுவதற்கும் இரண்டு வார கால அவகாசம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது. இந்த விசேட குழு எதிர்வரும் 27ஆம் திகதி 2 மணிக்கு கூடவுள்ளது.