இலங்கையின் மேல் மாகாணத்தில் இயங்கும் எட்டு பிரபல கால்பந்தாட்டக் கழகங்கள் பங்குபற்றும் ஐ லீக் கால்பந்தாட்டத்தில் இரண்டு தீர்மானம் மிக்க போட்டிகள் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் சனிக்கிழமை (05) நடைபெறவுள்ளது.
முதலாவது குழுவில் இடம்பெறும் மாளிகாவத்தை யூத் கழகத்துக்கும் களுத்துறை புளூ ஸ்டார் கழகத்துக்கும் இடையிலான போட்டி இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது குழுவில் இடம்பெறும் கொட்டாஞ்சேனை றினோன் கழகத்துக்கும் மொரகஸ்முல்லை கழகத்துக்கும் இடையிலான போட்டி நடைபெறவுள்ளது.
கொழும்பில் தற்போது கால்பந்தாட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளதாலும் பரபரப்பான போட்டிகள் நடைபெறுவதாலும் இப் போட்டிகளைக் கண்டுகளிக்க இரசிகர்கள் பெருந்திரளாக சுகததாச விளையாட்டரங்கிற்கு வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நான்கு கழகங்களில் புளூ ஸ்டார் கழகமும் மொரகஸ்முல்லை கழகமும் முதல் இரண்டு கட்டங்களில் ஒரு போட்டியிலும் வெற்றிபெறாததால் அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளன.
அதேவேளை தத்தமது குழுக்களில் தலா ஒரு வெற்றியுடன் 3 புள்ளிகளை ஈட்டியுள்ள மாளிகாவத்தை யூத் கழகமும், றினோன் கழகமும் அரை இறுதிகளுக்கு முன்னேறுவதாக இருந்தால் அதிகப்படியான கோல்களைப் போட வேண்டிய கட்டயாத்தில் இருக்கின்றன.
முதலாவது குழுவில் மாளிகாவத்தை யூத் கழகம் 2 அல்லது அதற்கு மேற்பட்ட கோல்கள் வித்தியாசத்தில் இன்றைய போட்டியில் புளூ ஸ்டார் கழகத்தை வெற்றிகொண்டால் அரை இறுதி வாய்ப்பை பெற்றுவிடும்.
அதேபோன்று இரண்டாவது குழுவில் றினோன் கழகம் 3 அல்லது அதற்கு மேற்பட்ட கோல்கள் வித்தியாசத்தில் மொரகஸ்முல்லை கழகத்தை வெற்றிகொண்டால் அரை இறுதியில் விளையாட தகுதிபெறும்.
எனவே மாளிகாவத்தை யூத் கழகமும் றினோன் கழகமும் அதிகப்படியான கோல் எண்ணிக்கைகளை குறிவைத்து இன்றைய போட்டிகளில் விளையாடும் என்பது உறுதி.
அதேவேளை, புளூ ஸ்டார் கழகமும் மொரகஸ்முல்லை கழகமும் ஆறுதல் வெற்றிகளை ஈட்டுவதற்காக கடுமையாக முயற்சிக்கவுள்ளன.
இதன் காரணமாக இன்று பிற்பகல் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகளும் கடைசிவரை பரபரப்யையும் விறுவிறுப்பையும் தோற்றுவிக்கும் என்பது உறுதி.
நாளை ஞாயிற்றுக்கிழமை (06) முன்றாம் கட்டத்துக்கான கடைசி 2 போட்டிகள் நடைபெறவுள்ளன.
முதலாவது போட்டியில் ரெட் ஸ்டார் கழகத்தை ஜாவா லேன் கழகமும் தொடரும் போட்டியில் சோண்டர்ஸ் கழகத்தை நியூ ஸ்டார் கழகமும் எதிர்த்தாடவுள்ளன.

ஐ லீக் கால்பந்தாட்டப் போட்டியை கொட்டாஞ்சேனை செலஞ்சர்ஸ் கழகத்தின் தலைவர் எம்.ஐ. அன்தனி மணிவண்ணன் ஏற்பாடு செய்துள்ளதுடன் அவரது தலைமையிலான ஏற்பாட்டுக் குழுவினர் போட்டிகளை மிகச் சிறப்பாக நடத்திவருகின்றனர்.
இப் போட்டியில் சம்பியனாகும் அணிக்கு மொத்தம் 9 இலட்சம் ரூபாவும் இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு மொத்தம் 7 இலட்சம் ரூபாவும் பணப்பரிசாக கிடைக்கும்.
அரை இறுதியுடன் வெளியேறும் இரண்டு அணிகளுக்கு தலா 4 இலட்சம் ரூபாவும் முதல் சுற்றுடன் வெளியேறும் அணிகளுக்கு 3 இலட்சம் ரூபாவும் போட்டி கட்டணமாக வழங்கப்பபடுகிறது.