நாவலப்பிட்டி கலபட நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டி வெஸ்டோல் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞரே காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன இளைஞர், அவரது நான்கு நண்பர்களுடன், வியாழக்கிழமை (17) காலை கலபட நீர்வீழ்ச்சிக்கு கட்டுப்பாட்டாளர்களுக்கு தெரிவிக்காமலும், பிரதான நுழைவாயிலில் பற்றுச்சீட்டுக்களைப் பெறாமலும் சென்றுள்ளார்.
மேலும் நீர்வீழ்ச்சிக்கு மேலே உள்ள காட்டின் வழியாக சட்டவிரோதமாக நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.
காணாமல் போன இளைஞன் கொழும்பில் வேலை செய்பவர் எனவும் புத்தாண்டு விடுமுறைக்காக வீடு திரும்பியிருந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறையில் வந்தவர் தனது நண்பர்களுடன் வெளியே சென்றிருந்தபோது இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலபட நீர்வீழ்ச்சியில் காணாமல் போன மேற்படி இளைஞனை தேடுவதற்காக மக்கள் நடவடிக்கை எடுத்த போதிலும், அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே இளைஞனை கண்டுபிடிக்க கடற்படையினரின் உதவியைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.