களுத்துறை, புலத்சிங்கள பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றிற்குள் நுழைந்து பெறுமதியான பொருட்களை திருடி மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்ற இரண்டு சந்தேக நபர்கள் இன்று திங்கட்கிழமை (07) அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 மற்றும் 22 வயதுடையவர்கள் ஆவார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
புலத்சிங்கள பகுதியிலிருந்து யால சந்தி ஊடாக அதிக வேகத்துடன் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை பொலிஸார் நிறுத்த முயன்றுள்ளனர்.
ஆனால் சந்தேக நபர்கள் இருவரும் பொலிஸ் உத்தரவையும் மீறி மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றுள்ளனர்.
இதனால் பொலிஸ் அதிகாரிகள் சிலர் மோட்டார் சைக்கிளை துரத்திச் சென்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேக நபர்கள் இருவரும் விற்பனை நிலையம் ஒன்றிற்குள் நுழைந்து பெறுமதியான பொருட்களைத் திருடியுள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து 65 ஆயிரம் ரூபா பணம், 25 சிகரட்டு பெட்டிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளுக்கு பயன்படுத்தப்படும் ரீசார்ஜ் மற்றும் டே்ட்டா கார்டுகள் 450 என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் ஹொரணை நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.