காலிமுகத்திடல் போராட்டக்குழுவினரால் தாக்கல் செய்யப்பட்ட 4 மனுக்களும் மீளப் பெறப்பட்டுள்ளன.
காலிமுகத்திடல் போராட்டக்களத்திலிருந்து வெளியேற கொழும்பு –கோட்டை காவல்துறையிரால் விடுத்த அறிவிப்பை இடைநிறுத்த கோரி போராட்ட குழுவினரால் சமர்பிக்கப்பட்ட 4 மனுக்களும் இவ்வாறு மீளப் பெறப்பட்டதாக நீதிமன்றத்திற்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.
முன்னதாக உரிய சட்ட அனுமதி பெறப்படாமல் காலிமுகத்திடலில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள நிர்மாணங்கள் இன்றுவரையில் அகற்றப்படாது என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதியளித்திருந்தார்.
எனினும், குறித்த அறிவுறுத்தலை வலுவிழக்கச் செய்யுமாறு வலியுறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றில் 4 மனுக்கள் தாக்கல் செய்யபட்டிருந்தன. அந்த மனுக்களே மீளப் பெறப்பட்டன.
முன்னாள் நிதியமைச்சர்களான மகிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஸ ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயண தடைக்கான காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயத்தின் முன்னிலையில் இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்படி, அவர்களுக்கான வெளிநாட்டு பயணத் தடையினை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ம் திகதி வரையில் நீடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பாளிகளுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி சிறிலங்கா வணிக சபையின் முன்னாள் தலைவர் சந்திரிக்கா ஜயரட்ன உள்ளிட்ட தரப்பினர் இதற்கு முன்னர் அடிப்படை உரிமை மனுவினை தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.