அம்பாறை பெரியநீலாவணையில், முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்க கல்முனை நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவு வழங்கியுள்ளது.
கல்முனை பாண்டிருப்பு அரசடி அம்மன் ஆலய முன்றலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
சங்கம் மற்றும் பொதுமக்கள் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாற முயன்றனர்.
அங்கு வருகை தந்த பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க தலைமையிலான பொலிஸார் கல்முனை நீதிவான்
நீதிமன்ற தடை உத்தரவை காண்பித்து, அங்கிருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து
மட்டக்களப்பு நகரில் விமான நிலைய வீதியில் உள்ள ஸ்ரீ பரிபூர்ண விநாயகர் ஆலயத்திற்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறினர்.
அங்கு வருகை தந்த மட்டக்களப்பு பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸார் கஞ்சி வழங்கும் செயற்பாடுகளை செய்யவேண்டாம் என
எச்சரித்தார்.
அதற்கு மறுப்பு தெரிவித்த ஏற்பாட்டாளர்கள் தொடர்ந்து தமது செயற்பாடுகளை
முன்னெடுத்தனர்.
சுகாதார நடைமுறையினை பின்பற்றவும் பொதுச்சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனைகள் இன்று கஞ்சி செயற்பாடுகளை முன்னெடுக்கமுடியாது என மீண்டும்
தடைகளை ஏற்படுத்துவதற்கு பொலிஸார் முயற்சித்த நிலையில் அங்கு பொதுச்சுகாதார பரிசோதர் ஒருவரையும் அழைத்துவந்து நிகழ்வினை
தடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
அங்குவந்த பொதுச்சுகாதார பரிசோதகர் சுகாதார நடைமுறைகளைப்பேணி செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு தெரிவித்ததை தொடர்ந்து சுகாதார நடைமுறைகளை பேணியவாறு
கஞ்சி காய்ச்சும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

கஞ்சியை பரிமாறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோது விமான நிலைய வீதியின் இரு மருங்கிலும் போக்குவரத்து பொலிஸார் நிறுத்தப்பட்டு வீதியில் செல்வோருக்கு கஞ்சியை பரிமாறும் செயற்பாடுகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கஞ்சியை பருக வாகனங்களை நிறுத்தியவர்களை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகளை பொலிஸார் முன்னெடுத்திருந்த நிலையிலும் பெருமளவான மக்கள் கஞ்சியை வாங்கி பருகும் நிலைமையை காணமுடிந்தது.
அப்பகுதியினால் சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸும் வீதியின் கரையில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு
முள்ளிவாய்க்கால் கஞ்சி பருகிய நிலையில் அவரையும் அச்சுறுத்தும் வகையில் போக்குவரத்து பொலிஸார் செயற்பட்ட நிலையில் அவருக்கும்
போக்குவரத்து பொலிஸாருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது.