நடிகர் ராகவா லோரன்ஸ் கதையின் நாயகனாக நடித்து வரும் ‘சந்திரமுகி 2’ எனும் படத்தினைப் பற்றிய புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் திரையுலகத்தின் மூத்த இயக்குநர்களின் ஒருவரான பி. வாசு இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இதில் ராகவா லோரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்க, முக்கியமான வேடத்தில் பொலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்து வருகிறார்.
இவர்களுடன் வடிவேலு, ராதிகா சரத்குமார், லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், ரவி மரியா, டி. எம். கார்த்திக், சுரேஷ் மேனன், சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ‘நாட்டு நாட்டு..’ எனும் பாடலுக்காக 2023 ஆண்டிற்கான ஓஸ்கார் விருதினை வென்ற எம். எம். கீரவாணி இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நடிகை கங்கனா ரனாவத் அவருடைய பங்களிப்பை நிறைவு செய்திருப்பதாக படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இதனை நடிகை கங்கனா ரனாவத்தும் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ‘மறக்க இயலாத அனுபவம்’ என குறிப்பிட்டு புகைப்படத்துடன் பதிவிட்டிருக்கிறார்.