தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரில் ஒரு சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், இவற்றுடன் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ மற்றும் டி. பி. எல். எவ். (புளொட்) ஆகியவற்றுக்கு எவ்வித தொடர்புமில்லை.
வழமைபோல் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரனும் அவருக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் கூட்டமைப்பின் பெயரில் தனிவழியில் சென்றுகொண்டிருக்கின்றனர்.
பங்காளி கட்சிகளோ பிறிதொரு வழியில் இயங்கிவருகின்றனர்.
அண்மையில் ‘அபிவிருத்திக்கான அதிகாரப் பகிர்வு’ என்னும் தொனிப்பொருளில், இளைஞர் பௌத்த சங்கம் என்னும் சிங்கள அமைப்புடன் கலந்துரையாடியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
அபிவிருத்திக்கான அதிகாரப் பகிர்வு என்றால் என்ன? பொருளாதார நெருக்கடியை சாதகமாகக் கொண்டு சிங்கள – பௌத்த சிந்தனை போக்குடையவர்களின் மனங்களை மாற்றமுடியுமென்று நம்புகின்றனரா? இந்தத் தலைப்பு தொடர்பில் இப்படித்தான் பொருள் கொள்ள முடியும்.
சிங்கள – பௌத்த சமூக அமைப்புக்களுக்கு தமிழ் மக்களின் பிரச்னைகளை தெளிவுபடுத்த வேண்டுமென்று எண்ணுவதில் தவறில்லை.
ஆனால், அதற்கு தலைமை தாங்க வேண்டியவர்கள் யார் என்பதுதான் கேள்வியாகும்.
ஏனெனில், 2015இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவ்வாறானதொரு செயல்பாட்டை பரந்தளவில் முன்nடுக்க வேண்டுமென்னும் அபிப்பிராயம் பலராலும் முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பில் சம்பந்தனிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
ஆனால், அந்தப் பொறுப்பை அரசாங்கம்தான் (சிங்களவர்கள்தான்) செய்ய வேண்டும் என்பதே சம்பந்தனின் நிலைப்பாடாக இருந்தது.
சம்பந்தன் கூறியதில் தவறில்லை.
சிங்கள மக்களுக்கான தெளிவூட்டல்கள், அதிகாரப்பகிர்வுக்கு ஆதரவான சிங்கள அரசியலாளர்களால் செய்யப்பட வேண்டியதாகும்.
ரணில் – மைத்திரி ஆட்சிக்காலத்தில் இதனை முன்னெடுத்திருக்கலாம்.
ஆனால், அது நடக்கவில்லை.
புதிய அரசியல் யாப்புக்கான மக்கள் கருத்தறியும் குழுவால் அபிப்பிராயங்கள் பெறப்பட்டன.
அது ஒன்றுதான் சிங்கள மக்களை நோக்கிச் சென்ற செயல்பாடாகும்.
ஆனால், அந்தக் குழுவின் தலைவராக இருந்த லால் விஜயநாயக்க ஒரு சிங்கள தேசியவாத முகம் கொண்டவரல்ல.
அவர் தொடர்பில், சிங்கள – பௌத்த தேசியவாத தரப்பினர்கள் மத்தியில் சாதகமான அபிப்பிராயங்கள் இருக்கவில்லை. அதேபோன்று, அரசியல் யாப்பு ஆலோசனை குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்னவும் அவ்வாறான ஒருவர்தான்.
அவருக்கும் சிங்கள – பௌத்த தேசியவாத தரப்பினர் மத்தியில் செல்வாக்கில்லை.
அரசியல் யாப்புக்கான முயற்சிகள் மிகவும் ஆர்ப்பாட்டமாக முன்னெடுக்கப்பட்டன.
தமிழ் சூழலில் பலவாறான விவாதங்கள் இடம்பெற்றன.
சமஷ்டி இருக்கின்றது ஆனால் பதுங்கியிருக்கின்றது என்றும் – இல்லை – இது ஒற்றையாட்சியை மீளவும் புதிய வடிவில் கொண்டுவருவதற்கான முயற்சியென்றும் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றன.
இறுதியில் நடந்ததோ மீளவும் தமிழர்களின் காலம் விரயமானது மட்டும்தான்.
விடயங்களை ஆழமாக நோக்கினால், இந்த முயற்சி இறுதியில் பிசுபிசுத்துவிடும் என்பதை முன்கூட்டியே அறிந்துதான் அரசாங்கம் இந்த விடயத்தில் ஆழமான கரிசைனையின்றி செயல்பட்டதோ என்றுதான் சந்தேகப்பட வேண்டியிருக்கின்றது. இந்த அனுபவங்களிலிருந்து பாடங்களை தமிழ் அரசியலாளர்கள் கற்றுக்கொள்ளவேண்டும்.
சிங்கள – பௌத்த தரப்பினருக்கு, சுமந்திரன் போன்ற அதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரப்பகிர்வின் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்த முடியாது.
அதற்குப் பதிலாக அதிகாரப்பகிர்வுக்கு ஆதரவான நிலைப்பாடுடைய சிங்கள அரசியல்வாதிகள், பௌத்த பிக்குகள், சிங்கள புத்திஜீவிகள் அனைவரும் ஒரு சிந்தனை மாற்றத்துக்கான முன்னணியாக இயங்கவேண்டும்.
அப்படி நடந்தால், அந்த முயற்சி ஒருவேளை சாதகமான சூழலை ஏற்படுத்துவதற்கு உதவக்கூடும்.