அரசாங்க அல்லது அரச அதிகாரிகளின் தரப்பினராகவுள்ள அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பிரதம நீதியரசர் உட்பட நீதித்துறை அதிகாரிகளுடன் நேரடியான கடிதம் மூலமான தொடர்புகளை தவிர்க்க வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்களின் தலைவர்களுக்கு இன்று (15) கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
நிறுவனங்கள் சட்டத்தின் 27 ஆவது அத்தியாயத்தின் விதிகள் மற்றும் அது சார்ந்த அரச நிர்வாக சுற்றறிக்கை அறிவுறுத்தல்களின்படி, சட்டமா அதிபர் திணைக்களத்துடன் மட்டுமே கடிதப் பரிமாற்றம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அப்பாற்பட்ட விடயங்கள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கையாள்வதாயின் அது ஜனாதிபதி செயலகத்தின் ஊடாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.