அட்டன் – மஸ்கெலியா பிரதான வீதியில் டிக்கோயா நகருக்கு அருகில் தனியார் பஸ் ஒன்றுடன் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவன் உள்ளிட்ட 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து புதன்கிழமை (16) இரவு இடம் பெற்றுள்ளது.
மஸ்கெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸுடன் அட்டனில் இருந்து லெதண்டி தோட்டம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
முச்சக்கரவண்டி அதிவேகமாக பயணித்தமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முச்சக்கரவண்டியில் பயணித்த ஆறு பேரும் காயமடைந்த நிலையில், டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்பின்னர் காயமடைந்த 13 வயதுடைய பாடசாலை மாணவன் உள்ளிட்ட 3 பேர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டியின் சாரதி விபத்து நடந்த நேரத்தில் மதுபோதையில் இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைக்காக பஸ் சாரதி அட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.