ஐ.பி.எல். 53-வது லீக் போட்டி இன்று மாலை 3.30 மணிக்கு தர்ம சாலாவில் இடம்பெறவுள்ளது.
இதில் ருதுராஜ் கெய்க் வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-சாம்கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
பிளே ஓப் சுற்று வாய்ப்பில் தொடர்ந்து இருக்க இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் சென்னை சூப்பர் கிங்சுக்கு இருக்கிறது. பஞ்சாப் கிங்சுக்கு பதிலடி கொடுத்து 6-வது வெற்றியை சி.எஸ்.கே. பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னையை மீண்டும் வீழ்த்தி 5-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.
இலங்கையின் வேகப்பந்து வீரர் பதிரன சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சில் துருப்பு சீட்டாக இருக்கிறார். மலிங்க போன்று பந்து வீசும் இவர் 6 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 28 ஓட்டங்கள் கொடுத்து 4 விக்கெட்டை கைப்பற்றியது அவரது சிறந்த பந்துவீச்சாகும்.
உலக கிண்ண விசா நடைமுறைக்காக நாடு திரும்பியதால் அவர் சென்னையில் கடந்த 1 ஆம் திகதி பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. இன்றைய போட்டியிலும் அவர் விளையாடுவது சந்தேகம் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது.
தற்போது அவர் அணியோடு இணைந்துள்ளார். இதனால் இன்று விளையாடலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கிரிக்கெட் வாழ்க்கையில் டோனி எனது தந்தை போன்றவர் என்று பதிரன தெரிவித்துள்ளார். இது தொடர்ச்சியாக அவர் கூறியதாவது:-
டோனி என்னை நன்றாக கவனித்து கொள்கிறார். நான் என்ன செய்ய வேண்டும் என்று அதிகமான அறிவுரையை வழங்குகிறார். நான் களத்தில் இருந்தாலும், வெளியே இருந்தாலும் அவர் கூறும் சின்ன சின்ன விடயங்கள் கூட எனக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கும். கிரிக்கெட் வாழ்க்கையில் டோனி எனது தந்தையாவார். எனது தந்தைக்கு பிறகு அவர் தான் (டோனி), எனது தந்தையின் பங்களிப்பில் உள்ளார்.
வீரர்களை எப்படி கையாள வேண்டும் என்று அவருக்கு தெரியும். அவரிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்றால் நிச்சயமாக அவரிடம் சென்று கேட்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
பதிரன கடந்த ஐ.பி.எல். போட்டியில் 12 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை கைப்பற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற முக்கிய கரணமாக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.