தேநீர், மற்றும் கோப்பி பானம் ஆகியனவற்றின் விலையை குறைப்பதற்கு தீர்மானம்!

0
135

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டதனை தொடர்ந்து தேநீர், பால் கலந்த தேநீர், மற்றும் கோப்பி பானம் ஆகியனவற்றின் விலையை குறைப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இதனை தெரிவித்தார்.

இதன்படி, ஒரு கோப்பை தேநீரின் விலை  30 ரூபாவாகவும், ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 100 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு நிறுவனம் எரிவாயு விலையை குறைத்துள்ளது. இதனையடுத்து, இவ்வாறு தேநீரின் விலை குறைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு கொள்கலன் விலை 271 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 4280 ரூபாவாக நிர்ணயிக்கப்படடுள்ளது.

அத்துடன்,  5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு கொள்கலன் விலை 107 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1720 ரூபாவாகும்.

மேலும், 2.3 கிலோ லிட்ரோ எரிவாயு கொள்கலனின் விலை 48 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 800 ரூபாவாக குறைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயுவின் விலையை குறைத்தமைக்கு நிகராக லாஃப்ஸ் நிறுவனமும் சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.

லாஃப்ஸ் நிறுவனம் விலைகுறைப்பிற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லையாயின்  அந்நிறுவனத்திற்கு முன்பாக உண்ணாவிரதத்தில் ஈடுபட போவதாகவும் அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டார்.

அத்துடன், சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி விதிக்கப்பட்டுள்ளமையினால் உணவுப் பண்டங்களுக்கான உள்ளீடுகளின் விலைகள் அதிகரித்துள்ளமை காரணமாக கொத்து ரொட்டி மற்றும் உணவு பொதிகளின் விலைகளை 10 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.