நாட்டில் தினமும் 8 உயிர்மாய்ப்பு சம்பவங்கள்!

0
7

சமூகத்தில் பல்வேறு காரணங்களால், பாடசாலை மாணவர்கள் தற்போது மன அழுத்தங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இது தெரியவந்ததாக  சுகாதார அமைச்சின் விசேட வைத்திய நிபுணர் லக்மினி நயனா மகோதரத்ன தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் கூறியுள்ளார்.

“2024 ஆம் ஆண்டில், இலங்கையில் ஒரு பாடசாலை சுகாதார கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, தரவுகளைப் பார்த்தபோது, 22.4% மாணவர்கள் தனிமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

13-17 வயதுடைய இந்த பாடசாலை செல்லும் மாணவர்களில் 11.9% பேர், ஏதோவொன்றைப் பற்றி கவலைப்படுவதால் இரவில் தூங்குவதில் சிரமப்படுவதாகக் கூறினர். 

சுமார் 18% பேர் மனச்சோர்வின் அறிகுறிகளைக் கொண்டிருந்தனர். 7.5% பேருக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை. 25% மாணவர்கள் தங்கள் மனதில் உள்ள ஒரு பிரச்சினையைப் பற்றி பேச யாராவது இருப்பதாகக் கூறினர். 

அதாவது 75% மாணவர்களுக்கு அவர்களுக்கு நெருக்கமானவர்கள் யாரும் இல்லை. பல்வேறு சமூகப் பிரச்சினைகள் காரணமாக இப்போது மாணவர்கள் அதிக அழுத்தத்தில் இருக்கலாம். அதே நேரத்தில், பெரியவர்களும் அழுத்தத்தில் இருக்கலாம் என்றார்.

இதேவேளை, நாட்டில் தினமும் சுமார் 8 உயிர்மாய்ப்பு சம்பவங்கள் பதிவாகின்றதாக தேசிய மனநல நிறுவனத்தின் மனநல மருத்துவர் டாக்டர் சஜீவன் அமரசிங்க கூறினார்.

“1996 ஆம் ஆண்டில்,  100,000 க்கு 47 என்ற உயிர்மாய்ப்புகளின் அடிப்படையில் உலகில் இரண்டாவது இடத்தில் இருந்தோம்.

இப்போது அது 100,000 க்கு 15 என குறைந்துள்ளது. எனினும், ஒரு நாளைக்கு சுமார் 8 உயிர்மாய்ப்புகள் நடக்கின்றன. ஊடகங்களில் ஒன்று அல்லது இரண்டு மட்டுமே செய்தியாக வெளியாகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.