ஆணைக்குழுவின் தலைவர் என்ற ரீதியில் எனது அனுமதி இல்லாமல் அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் மின்கட்டணத்தை இன்று முதல் 65 சதவீதத்தால் அதிகரிக்க இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழவின் மூன்று உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளார்கள். நியாயமற்ற மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவேன் என இலங்கை பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
24 மணித்தியாலங்களும் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க வேண்டுமாயின் வருடாந்தம் 287 பில்லியன் ரூபா வருமானத்தை பெற்றுக்கொள்ளும் வகையில் 65 சதவீதத்தால் மின்கட்டணத்தை அதிகரிக்க இலங்கை மின்சார சபை இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் மின்கட்டண அதிகரிப்பு தொடர்பான பரிந்துரையை முன்வைத்தது.
நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மின்கட்டணத்தை 65 சதவீதத்தால் மீண்டும் அதிகரித்தால் நாட்டு மக்கள் மிக மோசமாக பாதிக்கப்படுவார்கள், அது சமூக கட்டமைப்பில் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும், ஆகவே வருடாந்தம் 142 பில்லியன் ரூபா வருமானத்தை பெற்றுக்கொள்ளும் வகையில் 36 சதவீதத்தால் மின்கட்டணத்தை அதிகரிக்க அனுமதி வழங்க பொதுபயன்பாட்டு ஆணைக்குழு தீர்மானித்திருந்தது.
36 சதவீத மின்கட்டண அதிகரிப்பு தீர்மானத்தை இலங்கை மின்சார சபை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆணைக்குழவின் உறுப்பினர்களுக்குள் முரண்பாடுகளை அரசியல் தரப்பினர் ஏற்படுத்தி, ஆணைக்குழுக்குள் இணக்கப்பாடற்ற தன்மையை தோற்றுவித்துள்ளார்கள். 36 சதவீத மின்கட்டண அதிகரிப்பு அனுமதி தீர்மானத்தை புறக்கணித்து 65 சதவீதத்தால் மின்கட்டணத்தை அதிகரிக்க இலங்கை மின்சார சபை முன்வைத்த பரிந்துரைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழவின் மூன்று உறுப்பினர்கள் அரசியல் அழுத்தங்களினால் எனது அனுமதி இல்லாமல் இணக்கம் தெரிவித்துள்ளார். இந்த மின்கட்டண அதிகரிப்பை இன்று முதல் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
30,60 மற்றும் 90 மின்னலகு என்ற அடிப்படையில் மின்சாரத்தை பாவிக்கும் பாவனையாளர்களின் மின்கட்டணம் 400 சதவீதத்தினால் அதிகரிக்கப்படும். சுற்றுலாத்துறை சேவைக்கு ஒரு அலகிற்கு தற்போது அறவிடப்படும் 25 ரூபா 40 ரூபாவாகவும், கைத்தொழிற்சாலைகளிடமிருந்து அறவிடப்படும் ஒரு அலகுக்கான கட்டணம் 50 ரூபாவாகவும் அதிகரிக்கப்படும். நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மின்கட்டணத்தை அதிகரித்தால் மக்கள் போராட்டம் மீண்டும் தோற்றம் பெறும்.
நியாயமற்ற மின்கட்டண அதிகரிப்பு தீர்மானத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஆணைக்குழுவின் சட்டத்திற்கு முரணாக செயற்படும் தரப்பினருக்கு எதிராகவும்,மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராகவும் நீதிமன்றம் செல்வேன் என்றார்.