யாழ்ப்பாணத்தில் சுட்டுப் படுகொலைசெய்யப்பட்ட, ஊடகவியலாளர் நிமலராஜனின் 24வது ஆண்டு நினைவு தினம், மட்டக்களப்பு காந்திபூங்காவில் அமைக்கப்பட்டுள்ள,
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நினைவுத் தூபியில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டு.ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்து நடாத்திய நினைவுதின நிகழ்வின்போது, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் திருவுருப்படத்திற்கு ஊடகவியலாளர்கள் இணைந்து மலர்மாலை அணிவித்து, நினைவுச்சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், பொது நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தார்கள். நிமலராஜன், இரண்டாயிரமாம் ஆண்டு ஒக்டோபர் 19ம் திகதி, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்திற்கு அண்மையாகவுள்ள அவரது வீட்டில் வைத்து, இனந்தெரியாத ஆயுததாரிகளால், சுட்டுப்படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.