பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட 20 குழுவினரால் நாடளாவிய ரீதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றிவளைப்பின் போது பாதாள உலக குழுக்களைச் சேர்ந்தவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாக சந்தேகிக்கப்படும் 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தின் வட பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் பேலியகொடை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மொரட்டுவை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் ஹங்வெல்ல, தலங்கம மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ரணால ,நுகேகொட மற்றும் ஒருகொடவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 22, 23, 40 மற்றும் 43 வயதுடைய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பல்லேகெல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய சந்தேக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மிட்டியாகொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மிட்டியாகொட பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் இதுவரை பாதாள உலக குற்றக் குழுக்களைச் சேர்ந்த 483 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.