புத்தளம் கல்லடி மீ ஓயா ஆற்றுப் பகுதியில் நேற்று புதன்கிழமை (03) காலை மான் இறைச்சியுடன் நபரொருவர் புத்தளம் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மானை வேட்டையாடி இறைச்சியை வெட்டிக் கொண்டிருப்பதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்குக் கிடைக்கெப்பெற்ற தகவலுக்கமைய குறித்த பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
இதன்போது ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், 15 கிலோ கிராம் இறைச்சி, மான் தலை, மான்தோல், தராசு மற்றும் கத்திகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்லடி பகுதியைச் சேர்ந்தவரென வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட இறைச்சி மற்றும் ஏனைய பொருட்களையும் நேற்றைய தினம் புத்தளம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.
இதன்போது பதில் நீதிவானாக கடமையாற்றிய மொஹமட் இக்பால் பிணையில் விடுவிப்பதற்கு உத்தரவு பிறப்பித்ததுடன், எதிர் வருகின்ற 30 ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.