பொதுஜன பெரமுன கட்சியின் உத்தியோகப்பூர்வ தீர்மானங்களுக்கு எதிராக செயற்படுபவர்கள் முக்கிய பதவிகளில் இருந்து நீக்கப்படுவார்கள். பதவி மறுசீரமைப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள கட்சி மாநாட்டில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலவரம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக மாத்திரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குகிறோம். பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது சாத்தியமற்றதாயின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தையோ அல்லது தேசிய அரசாங்கத்தையோ விரைவாக ஸ்தாபிக்க வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்றில் பெரும்பான்மை வகிக்கிறது. நிலையான அமைச்சரவை ஸ்தாபிக்கப்படும் போது பொதுஜன பெரமுனவிற்கு அமைச்சு ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளோம். பாராளுமன்றில் பெரும்பான்மை பலத்தை வைத்துக்கொண்டு நாட்டுக்காக விட்டுக்கொடுப்புடன் செயற்படுகிறோம். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உத்தியோகப்பூர்வ தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள் எதிர்வரும் நாட்களில் கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து நீக்கப்படுவார்கள். அத்துடன் கட்சியின் முக்கிய பதவிகள் மறுசீரமைக்கப்பட்டு அது எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள கட்சி மாநாட்டில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதி தெரிவு, அவசரகால சட்டம் உள்ளிட்ட தீர்மானங்களில் பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ்,முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும உட்பட 14 பேர் பொதுஜன பெரமுனவின் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.