கிருசாந்தி குமாராசுவாமி பாலியல்வன்முறை படுகொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட ஐவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல்மனுவை உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு இன்று ஏகமனதாக நிராகரித்துள்ளதுடன் மேல்முறையீடு செய்வதற்கும் அனுமதிமறுத்துள்ளது.
முதல் குற்றவாளி சோமரட்ண ராஜபக்ச உட்பட தண்டனை வழங்கப்பட்டுள்ள ஐவர் தாங்கள் பல வருடங்களாக மரணதண்டனை கைதிகளாக உள்ளனர் என தெரிவித்து அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
தங்களின் மரணதண்டனையை நிறைவேற்றால்,தங்களிற்கு பொதுமன்னிப்பை வழங்கவேண்டும் அல்லது தங்களிற்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றவேண்டும் என அவர்கள் தங்கள் மனுவில் தெரிவித்திருந்தனர்.
ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டிசில்வா அவர்களின் சார்பில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
மரணதண்டனை விதிக்கப்பட்டு நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்படுவது கொடுரமானது மனிதாபிமானற்றது என தங்கள் மனுவில் தெரிவித்திருந்த அவர்கள் இது தங்கள் அடிப்படை உரிமைகளை மீறுகின்றது என குறிப்பிட்டிருந்தனர்.
சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சார்பில் ஆஜராகிய சிரேஸ் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து கடும் ஆட்சேபணைகளை முன்வைத்தார்.
பொதுமன்னிப்பு வழங்குவது என்பது முற்றுமுழுதாக ஜனாதிபதியின் விருப்பமே எந்தவொரு குற்றவாளியும் அதனை சட்டபூர்வ உரிமையாக கருதமுடியாது என அவர் தெரிவித்தார்.
இந்த மனுகாலக்கெடுவிற்கு உட்பட்டது மேலும் மனுதாரர்கள் நல்லெண்ணத்தை உருவாக்கும் விதத்தில் செயற்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
நீதிபதிகள் குழுவினர் இந்த ஆட்சேபனையை ஏற்றுக்கொண்டதுடன் மனுவை நிராகரிக்க தீர்மானித்தனர்