மட்டக்களப்பு வாகரை காயான்கேணி விவசாய போதனாசிரியர் பிரிவில் பயறுணவு பயிர்ச்செய்கையின் உற்பத்தியை அதிகரித்தல் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றது.
விவசாய வாகரை விரிவாக்கல் நிலையத்தினால் விவசாய போதனாசிரியர் ஆர்.பிரபாகரன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் விவசாய பிரதி பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன் கலந்து கொண்டதோடு, அதிதிகளாக விவசாய உதவிப் பணிப்பாளர் இ.சுகுந்தன், வேல்ட் விஷன் நிறுவன ஒருங்கிணைப்பாளர் எ.பகிரதன், மட்டக்களப்பு வடக்கு வலய விவசாய போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் விவசாயிகளுக்கு பயிர் செய்கையினை மேம்படுத்தும் முகமாக செயல் முறை பயிற்சிகள் வழங்கப்பட்டதோடு, மண் பரிசோதனை, அதிக விளைச்சல் தரும் சிறந்த ரக இன விதைத் தெரிவு, பயறுச் செய்கையில் காணப்படும் தொழில் நுட்ப நடைமுறைகள், சேதன பீடை நாசினி தயாரிப்பும் பாவனையும், வெல்ல கரைசல் தயாரிப்பு, சேதன ஊக்கிகள் தயாரிப்பு, அறுவடைக்கு பின்னரான தொழில் நுட்பம், களஞ்சியப்படுத்தல் என்பன தொடர்பாக விளக்கங்களும் இதன்போது வழங்கப்பட்டன.