வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகளி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த தேர் உற்சவம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றினை ஒருங்கே கொண்ட இந்த ஆலயத்தின் மஹோற்சவமானது கடந்த 26ம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
ஆலய பிரதமகுரு சிவாகம கலாநிதி சிவஸ்ரீ கமலராஜ குருக்கள் தலைமையில் உற்சவம் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.
இன்று காலை விநாயகர் மற்றும் கொடித்தம்பத்திற்கு விசேட பூஜைகள் நடைபெற்று பஞ்சமுக விநாயகருக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி வீதியுலா சிறப்பாக நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து வெளிவீதி பஞ்ச பஞ்சமுக விநாயர் தேரில் ஆரோகணிக்க அங்கு விசேட பூஜைகள் நடைபெற்று பெண்கள், ஆண்கள் வடமிழுக்க தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. தேர் உற்சவத்தில் இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர்.
ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்தோற்சவம் நாளை ஞாயிற்றுக்கிழமை மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்குளத்தில் நடைபெறவுள்ளது.