இலங்கை மற்றும் பங்களாதேஷ் 19 வயதுக்கு உட்பட்ட இளையோர் ஒருநாள் தொடரின் ஆறாவது மற்றும் கடைசி போட்டி மழையால் கைவிடப்பட்டதை அடுத்து இந்த தொடரை பங்களாதேஷ் அணி 3–2 என கைப்பற்றியது.
இந்த ஒருநாள் தொடரை இழப்பதைத் தவிர்ப்பதற்கு கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையிலேயே நேற்று (8) நடைபெற்ற போட்டியில் இலங்கை இளையோர் அணி களமிறங்கியது. எனினும் போட்டியில் 39.1 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டதால் தொடர்ந்து போட்டியை நடத்த முடியாமல்போனது.
இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பேடுத்தாடிய பங்களாதேஷ் 19 வயதுக்கு உட்பட்ட அணியின் ஆரம்ப விக்கெட்டை ஒரு ஓட்டத்திற்கே வீழ்த்த முடிந்தது. எனினும் அணித் தலைவர் அஸிஸுல் ஹகிம் (94) மற்றும் ரிசான் ஹொசன் (ஆட்டமிழக்காது 48) ஆகியோர் 3 அவது விக்கெட்டுக்கு 108 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டு வலுச் சேர்த்தனர்.
இந்நிலையில் பங்களாதேஷ் இளையோர் அணி 39.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களை பெற்ற நிலையிலேயே மழை குறுக்கிட்டது. மீண்டும் ஒருமுறை சிறப்பாக பந்து வீசிய யாழ். பரியோவான் கல்லூரியின் வேகப்பந்து வீச்சாளர் குகதாஸ் மாதுலனுடன் தருஷ நவோத்யா மற்றும் ஹிமால் ரவிஹன்ச ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்த இளையோர் ஒருநாள் தொடரில் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி முதல் போட்டியில் வெற்றி பெற்ற போதும் அடுத்தடுத்து மூன்று போட்டிகளை தோற்ற நிலையிலேயே தொடரை இழந்துள்ளது.