முல்லைத்தீவு உடையார் கட்டு காட்டுப்பகுதியில் வெடிபொருட்களை தோண்டி எடுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக குறித்த நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு எறிகணைகளும் மீட்கப்பட்டுள்ளன.உடையார் கட்டு காட்டுப்பகுதியில் விடுதலைப்புலிகளின் வெடிபொருட்கள் காணப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலீசாரால் முறைப்பாடுசெய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய குறித்த பகுதியினை தோண்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
உடையார் கட்டுப்பகுதியில் இருந்து சுமார் பத்து கிலோமீற்றர் தூரம் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி, படை அதிகாரிகள் சிறப்பு அதிரடிப் படையினர், கிராம சேவையாளர் உள்ளிட்டவர்கள் குறித்த பகுதியினை பார்வையிட்டனர்.
தொடர்ந்து ஏற்கனவே தோண்டப்பட்ட பகுதியில் வெடிபொருட்கள் காணப்படுவதாக அடையாளம் காட்டப்பட்டு நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டிருந்தது.இதன்போது குறித்த பகுதியை சாதாரண இயந்திரந்தினால் அப்புறப்படுத்துவது ஆபத்தானதென சிறப்பு அதிரடிப்படையினரால் நீதிபதிக்கு தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பூர்த்தி செய்ததன் பின்னர் குறித்த இடத்தினை அகழ்வு செய்ய நீதிமன்றத்தினால் கட்டளை வழங்கப்படும் என நீதவான் சம்பவ இடத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.
குறித்த இடத்தின் அருகில் உள்ள நிலத்தின் மேல் காணப்பட்ட இரண்டு 81 மில்லிமீற்றர் எறிகணைகளும் நீதவான் முன்னிலையில் சிறப்பு அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டது.குறித்த காட்டுப்பகுதியில் முன்னர் விடுதலைப்புலிகளின் வெடிபொருள் தயாரிக்கும் முகாம்கள் காணப்பட்டமையினால் விடுதலைப்புலிகளினால் கைவிடப்பட்ட வெடிபொருட்களை சட்டவிரோத பயன்பாட்டாளர்கள் எடுத்து சென்று வரும் நிலையில் புதுக்குடியிருப்பு பொலீசாரால் கடந்த காலங்களில் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த காட்டுப்பகுதியில் வெடிபொருட்களின் எச்சங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.