முல்லைத்தீவில் 5 கடைகளையும் கோவில் உண்டியலையும் உடைத்துத் திருடிய சிறுவன் உள்ளிட்ட இருவர் கைது!

0
66

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் ஐந்து கடைகளையும் கோவிலையும் உடைத்துத் திருடிய குற்றச்சாட்டில்  இருவர்  புதுக்குடியிருப்பு பொலிஸாரால்  நேற்று ஞாயிற்றுக்கிழமை (04)  கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடைகள், ஆலய உண்டியல்  உடைத்து திருடப்பட்ட சம்பவங்கள் அண்மைய நாட்களாக தொடர்ச்சியாக  இடம்பெற்று வருகின்றது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சந்திக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு கடை, வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள ஒரு கடை , மந்துவில்லில் உள்ள ஒரு கடை, காமன்ஸ் அருகே ஒரு கடை, செம்மண்குன்றில் ஒரு கடை என  ஐந்து கடைகளும்  புதுக்குடியிருப்பு நாகதம்பிரான் ஆலயத்தின் உண்டியலும்  உடைக்கப்பட்டு பணமும் பொருட்களும் திருடப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையடுத்து  புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹெரத் தலைமையிலான பொலிஸார் குறித்த கைது  நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து  திருடப்பட்ட 46,230 பணமும் , திருடப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.  

புதுக்குடியிருபு்பு 10 ஆம் வட்டாரம் பகுதியை சேர்ந்த 14 வயதுடைய சிறுவனும், மந்துவில்லை சேர்ந்த 24 வயதுடைய  இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இவ்வாறான திருட்டு சம்பவங்கள்  தொடர்ச்சியாக  இடம்பெற்று வருவதனால் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், புதுக்குடியிருப்பு பொலிஸார் புதுக்குடியிருப்பு பகுதிகளில் பாதுகாப்பை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.