இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் சங்கம் தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் நடத்திய 3ஆவது ரிட்ஸ்பறி தொடர் ஓட்ட திருவிழாவில் கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி ஆண்கள் பிரிவிலும் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை பெண்கள் பிரிவிலும் ஒட்டுமொத்த சம்பியனாகி ரிட்ஸ்பறி வெற்றிக் கிண்ணங்களை சுவீகரித்தன.
14, 16, 18, 20 ஆகிய வயதுகளுக்குட்பட்ட பிரிவுகளில் இரு பாலாருக்கும் கடந்த 9, 10, 11ஆம் திகதிகளில் நடத்தப்பட்ட ரிட்ஸ்பறி தொடர் ஓட்ட திருவிழாவில் ஆண்கள் பிரிவில் 155 புள்ளிகளைப் பெற்று புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி ஒட்டுமொத்த சம்பியனானது.
இப் பிரிவில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி (103 புள்ளிகள்) 2ஆம் இடத்தையும் வென்னப்புவை புனித ஜோசப் வாஸ் கல்லூரி (81) 3ஆம் இடத்தையும் வலல்ல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி (44) 4ஆம் இடத்தையும் கண்டி திரித்துவ கல்லூரி (30) 5ஆம் இடத்தையும் பெற்றன.
பெண்கள் பிரிவில் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை 130 புள்ளிகளைப் பெற்று ஒட்டுமொத்த சம்பியனானது.
இப் பிரிவில் வலல்ல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி (116 புள்ளிகள்) 2ஆம் இடத்தையும் பன்னிப்பிட்டி தர்மபால வித்தியாலயம் (37) 3ஆம் இடத்தையும் பம்பலப்பிட்டி திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மடம் (35) 4ஆம் இடத்தையும் கொழும்பு புனித பிறிஜெட் மடம் (26) 5ஆம் இடத்தையும் பெற்றன.
இரண்டு பிரிவுகளிலும் 2, 3, 4, 5 ஆம் இடங்களைப் பெற்ற பாடசாலைகளுக்கும் கிண்ணங்கள் வழங்கப்பட்டன.
இம் முறை முதல் தடவையாக ரிட்ஸ்பறி கிண்ணங்கள் அந்தந்த பாடசாலைகளுக்கு சொந்மாகின.
இது இவ்வாறிருக்க, 14, 16, 18, 20 ஆகிய ஒவ்வொரு வயது பிரிவிலும் இரு பாலாரிலும் சம்பியனான, இரண்டாம் இடத்தைப் பெற்ற, 3ஆம் இடத்தைப் பெற்ற பாடசாலைகளுக்கும் கிண்ணங்கள் வழங்கப்பட்டது.